16 ஆண்டுக்குப் பின்னர் சேலத்திற்கு விமான சேவை

சேலம் - சென்னை இடையிலான விமான சேவையை கிங்பிஷர் நிறுவனம் நேற்று தொடங்கியது.
சென்னை - சேலம் இடையிலான பயண நேரம் ஒரு மணி நேரம் ஆகும். சென்னையிலிருந்து இந்த விமானம் பிற்பகல் 2.50க்குக் கிளம்பி, மாலை 3.50 மணிக்கு சேலத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், மாலை 4.20 மணிக்கு சேலத்திலிருந்து கிளம்பி மாலை 5.20 மணிக்கு சென்னை அடையும்.
7 நாட்களுக்கு முன்பு இந்த விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தால் அதற்கான கட்டணம் ரூ. 2,529 ஆகும். ஒரு வாரத்திற்குள் புக் செய்தால், ரூ. 2859 முதல் ரூ. 7000 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான நேற்று சேலத்திலிருந்து கிளம்பிய விமானத்திற்கு அனைத்து டிக்கெட்டுகளும் புக் ஆகியிருந்தன. ஒரு சீட் மட்டும் காலியாக இருந்தது.
இந்த விமான பயணத்தால் சேலம் மக்களுக்கு இன்னொரு பயனும் கிடைத்துள்ளது. கிங்பிஷர் சேவை மூலம், சேலத்திலிருந்து சென்னை வழியாக டெல்லிக்கும் பயணிகள் செல்ல முடியும். சேலத்திலிருந்து சென்னை வழியாக டெல்லி செல்ல விரும்புவோருக்கான கட்டணம் ரூ. 6700 ஆகும்.
கடந்த 1993ம் ஆண்டு சேலம் விமான நிலையம் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 136 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைந்துள்ளது தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் இந்த நிலத்தை தானமாக அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் எந்த விமான நிறுவனமும் சேவையைத் தொடங்க முன்வராததால் தொடங்கப்பட்டது முதல் விமான நிலையம் காலியாகவே கிடந்தது. ஆரம்பத்தில் என்இபிசி நிறுவனம் தனது சேவையை தொடங்கியது. ஆனால் பயணிகள் சரிவர வராததால் அந்த சேவை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து உள்ளூர் தொழில் துறையினர் இந்த விமான நிலையத்திற்கு உயிரூட்டும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனறர். கடந்த 2006ம் ஆண்டு ஏர் டெக்கான் நிறுவனம் சேலம் விமான நிலையத்திலிருந்து சேவையைத் தொடங்குவதாக அறிவித்தது. ஆனால் உள்ளூர் தொழில்துறையினர் ரூ. 90 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது 50 சதவீத அளவுக்கு விமான டிக்கெட்கள் விற்பனையாக வேண்டும் என அது உத்தரவாதம் கோரியது.
இந்த சமயத்தில் ஏர் டெக்கான் நிறுவனம் கிங்பிஷர் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. நீண்ட காலமாக நிலவி வந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக தற்போது கிங்பிஷர் நிறுவனம் தனது விமான சேவையை தொடங்கியுள்ளது.
சேலம் முக்கியப் பிரமுகரும், மாநில விவசாயத்துறை அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் முன்னிலையில் நேற்று விமான சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
சேலம் உற்பத்திக் கவுன்சில் தலைவர் மாரியப்பன் இந்த சேவை குறித்துக் கூறுகையில், சேலம்- சென்னை விமான சேவை தொடர்ந்து நீடிக்கும் என உறுதியாக நம்புகிறோம். மேலும் பல தனியார் விமான நிறுவனங்கள் இங்கு சேவையைத் தொடங்க முன்வரும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications