கங்கணா ரணவத், இம்ரான் ஹஷ்மிக்கும் ஹெட்லியைத் தெரியும்?
டெல்லி: இந்தியா வுக்கு எதிராக தீவிரவாத சதித் திட்டம் தீட்டி அமெரிக்காவில் கைதாகியுள்ள அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கும், இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் அதிகரித்து்க கொண்டே போகின்றன.தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட்டைத் தொடர்ந்து தற்போது நடிகர் இம்ரான் ஹஷ்மி, நடிகை கங்கணா ரணவத் ஆகியோருக்கும் ஹெட்லிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஹெட்லி மும்பை வந்தபோது அவருடன் ராகுல் பட் தொடர்பு கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கண்காணிப்பு வளையத்தின் கீழ் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) கொண்டு வந்துள்ளது. அவர் மும்பையை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாலிவுட் டைச் சேர்ந்த மேலும் சிலருடன் ஹெட்லிக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. பாலிவுட் இளம் நடிகர் இம்ரான் ஹஸ்மிக்கு ஹெட்லியை நன்றாகத் தெரியுமாம். ஹெட்லியுடன் அவர் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்புகிறது. இதுகுறித்த விசாரணை யை என்ஐஏ அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.
இம்ரான் ஹஸ்மிக்கும், ஹெட்லிக்கும் இடையிலான தொலைபேசித் தொடர்புகள் குறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளனவாம்.
மேலும் ராகுல் பட்தான், ஹெட்லிக்கு ஹஷ்மியை அறிமுகம் செய்து வைத்ததாகவும் தெரிய வந்துள்ளது. அற்குப் பின்னர் ஹெட்லியும், ஹஷ்மியும் இருமுறை சந்தித்துள்ளனராம். ஹஷ்மி நடித்துள்ள தும் மிலே படத்தின் ஷூட்டிங்கின்போது ஒருமுறை அவரை சந்தித்தாராம் ஹெட்லி.
ஹஷ்மிக்கும், ஹெட்லிக்கும் தொடர்புகள் இருப்பதை ராகுல் பட்தான் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளாராம்.
மகேஷ் பட்டின் உறவினர்தான் இம்ரான் ஹஷ்மி என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் பட் ஒரு சாட்சி...
இதற்கிடையே ராகுல் பட் மீது எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் இந்த வழக்கில் ஒரு சாட்சிதான் என்று உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறுகையில், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் சந்தேக ரேடாரின் கீழ்தான் உள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கு.
நடிகைகளுக்கும் ஹெட்லிக்கும் தொடர்பு...
இதற்கிடையே, ஹெட்லியை இரு பாலிவுட் நடிகைகளுக்கு ராகுல் பட் அறிமுகப்படுத்தி வைத்தாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் அந்த நடிகைகள் யார் என்ற தகவல் வெளியாகவில்லை.
வோ லம்ஹே படப்பிடிப்புத் தளத்தின்போது முதலில் ஹெட்லியும், ஹஷ்மியும் சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதே படப்பிடிப்புத் தளத்தில் வைத்து நடிகை கங்கணா ரணவத்திடம் ஹெட்லி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தும் மிலே படப்பிடிப்புத் தளத்தின்போது மறுபடியும் ஹஷ்மியும், ஹெட்லியும் சந்தித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம் இருவரும் ஒரு பப்பில் வைத்து அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் இன்னொரு தகவல் கூறுகிறது. இதுகுறித்தும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மும்பை ஃபிளாட்டில் தங்கிய ஹெட்லி ..
இதற்கிடையே, கடந்த 2007-08ம் ஆண்டில் ஹெட்லி இந்தியா வந்திருந்தபோது மும்பையில் உள்ள ஃபிளாட் ஒன்றில் தங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர் அங்கு தங்கியிருந்தது தொடர்பான எந்த தகவலும் அந்தக் குடியிருப்பின் ஆவணங்களில் இல்லை என்று கூறப்படுகிறது.
அந்த வீடு ப்ரீச்கேன்டி பகுதியில், அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு அருகே உள்ளது. அங்குள்ள ஹசு கிருபளானி என்பவருக்குச் சொந்தமான, 5வது மாடியில் உள்ள அபார்ட்மென்ட்டில்தான் பேயிங் கெஸ்ட் ஆக தங்கியிருந்தார் ஹெட்லி.
கிட்டத்தட்ட 2 மாதங்கள் அங்கு தங்கியிருந்தார். இங்குள்ள 57வது எண் வீடு கிருபளானிக்குச் சொந்தமானதாகும். ஹெட்லி இங்கு தங்கியிருந்தபோது அதுகுறித்து அந்த குடியிருப்பின் நிர்வாகக் கமிட்டிக்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லையாம் ஹசு கிருபளானி.
இதுகுறித்து கமிட்டியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், கிருபளானிக்குச் சொந்தமான ஃபிளாட்டில் தங்கியிருந்த ஹெட்லி குறித்து போலீஸார் விசாரித்தனர், தகவல் கோரினர்.
ஆனால் கிருபளானி இதுகுறித்து எங்களுக்கு எதுவும் தெரிவிக்காததால், ஹெட்லி குறித்த விவரங்கள் எங்களது பதிவேட்டில் இல்லை. யாராவது பேயிங் கெஸ்ட் ஆக தங்க விரும்பினால், அந்த வீட்டின் உரிமையாளர் முதலில் நிர்வாக கமிட்டியிடமிருந்து ஆட்சேனை இல்லை என்ற சான்றிதழைப் பெற வேண்டும். ஆனால் கிருபளானி இதை கடைப்பிடிக்கவில்லை என்றார்.
தற்போது கிருபளானியையும் போலீஸார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவுள்ளனர்.