கள்ளநோட்டு- சென்னையில் 2 வாலிபர்கள் கைது
சென்னை: பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை வங்கதேசம் வழியாக சென்னைக்கு கொண்டு வந்து புழக்கத்தில் விட்ட வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தி.நகரில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு நேற்று வெளி மாநில வாலிபர் ஒருவர் துணி வாங்கினார். அப்போது அவர் கொடு்த்த 500 ரூபாய் நோட்டின் மீது கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டு, போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் உடனடியாக கடைக்கு வந்து 500 ரூபாயை சோதனை செய்ததில், அது கள்ளநோட்டு என்பது தெரிய வந்தது. உடனே அந்த வெளிமாநில வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவன் பெயர் சாதிக் இஸ்லம் (29). மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவன் என்பது தெரிந்தது.
மேலும் சாதிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, 'நானும் இன்னொரு வரும் பெரியமேடு லாட்ஜில் தங்கியிருந்து கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டோம்' என்று கூறினான்.
உடனடியாக போலீசார் சாதிக்கை அழைத்துக்கொண்டு பெரியமேடு லாட்ஜுக்கு சென்றனர். ஆனால் சாதிக்கின் கூட்டாளி அங்கிருந்து தப்பி விட்டான். உடனே, சென்ட்ரலில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் சோதனையிட்ட போது, அதில் பதுங்கியிருந்த கூட்டாளி போலீசிடம் சிக்கினான்.
கூட்டாளியின் பெயர் அபில் (29). பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை வங்காள தேசம் வழியாக இவன் சென்னைக்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அபில்சாதிக் வைத்திருந்த பையில் ரூ. 30 ஆயிரத்துக்கு 500 ரூபாய் கள்ள நோட்டுகள், ஒரிஜினல் ரூபாய் 4,300 இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications