போர் வெற்றி-ராஜபக்சே படத்துடன் 1000 ரூபாய் நோட்டு
நான்காவது ஈழப் போர் எனப்படும் ஈழத்தில் நடந்த இறுதிக் கட்ட போரில் பல்வேறு நாட்டு உதவியுடன் விடுதலைப் புலிகளை வீழ்த்தியது இலங்கை அரசு.
இதைப் பாராட்டும் வகையிலும், கொண்டாடும் வகையிலும் தற்போது 1000 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது இலங்கை மத்திய வங்கி.
இந்த நோட்டின் ஒரு பகுதியில் ராஜபக்சே இரு கைகளையும் உயர்த்தியபடி உள்ள காட்சி இடம் பெற்றுள்ளது. வெளிநாடு சென்றிருந்த ராஜபக்சே, ஈழப் போரில் வெற்றி என்ற தகவல் கிடைத்ததும் உடனடியாக நாடு திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவர் கைகளை உயர்த்தியபடி போஸ் கொடுத்தார். அந்த போஸ்தான் இது.
மறுபக்கம், ராணுவ வீரர்கள் இலங்கைக் கொடியை ஏந்தியபடி வரும் காட்சி உள்ளது.
இந்த ரூபாய் நோட்டை ராஜபக்சே வெளியிட, மத்திய வங்கித் தலைவர் அஜீத் நிவாத் பெற்றுக் கொண்டார்.
இலங்கை பொருளாதாரம் காலி- ரணில்:
இந் நிலையில் இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்து போய் விட்டதாகவும், நாடு மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கவுள்ளதாகவும் சர்வதேச நிதியம் கூறியுள்ளதாக இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
இதுகுறித்து கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்து போய் விட்டதாகவும், நாடு மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் சர்வதேச நிதியம் கருத்து தெரிவித்துள்ளது.
சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் டோமினிக் ஸ்டிராஸ் கான் சமீபத்தில், மனித உரிமை கண்காணிப்பக செயல் இயக்குநர் பிராட் ஆடம்ஸுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிதியமே இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்து போய் விட்டதாக கூறியுள்ள நிலையில் நாம் அதை நம்பித்தான் ஆக வேண்டியுள்ளது.
பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக அரசு கூறி வரும் நிலையில் ஐஎம்எப் இவ்வாறு கூறியுள்ளதை சீரியஸாக சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
இலங்கைப் பொருளாதாரம் மிகப் பெரிய, கடுமையான நெருக்கடியை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
அளவுக்கு மீறி சர்வதேச நிதியத்திடமிருந்து இலங்கை அரசு கடன்களை வாங்கிக் குவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ரகசிய டீலிங்குகளாக உள்ளன. மேலும், ஊழலும், லஞ்சமும் அரசு மட்டத்தில் தலை விரித்தாடி வருகின்றன என்றார் ரணில்.













Click it and Unblock the Notifications