பெரியாறு அணையின் நீர் தேக்க அளவை 130 அடியாக குறைக்க கேரளா சதி!
தேனி: முல்லைப் பெரியாறு அணையில் 4 இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டிருப்பதாக கூறும் கேரளா அணையின் நீர்த்தேக்க அளவை 130 அடியாகக் குறைக்கவும் முடிவு செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது முடக்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது கேரள அரசு. தமிழக அரசின் வசம் உள்ள இந்த அணைக்கு அவ்வப்போது அத்துமீறி நுழைந்து ஆய்வு செய்கிறது.
இந் நிலையில் தற்போது அங்கு புதிதாக நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக (142 அடி) தற்போது பெரியாறு அணையில் 136 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கி வைக்க அனுமகிக்கிறது கேரளா.
தற்போது நல்ல மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் 134 அடியைத் தாண்டியுள்ளது. இதையடுத்து அங்கு வரும் நீரின் பெரும்பாலான பகுதி தானாகவே கேரள பகுதிக்கு திரும்பத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் அச்சுதானந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முல்லை பெரியாறு அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வருகிறது. எனவே, அணையின் நீர் மட்ட அளவு 135 அடியை எட்டி விட்டது. இந்த நிலையில், முல்லை பெரியாறு அணையில் நீர்க் கசிவு ஏற்பட்டுள்ளது. அணையின் 18வது பிளாக் பகுதியில் தண்ணீர் கசிகிறது.
எனவே, அணையின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் தலைமை பொறியாளர் பரமேஸ்வரன் நாயர் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்படுகிறது. அந்த குழுவில் சசிதரன் மற்றும் நீர்ப்பாசன துறை தலைமை பொறியாளர் லத்திகா ஆகியோரும் இடம் பெறுவார்கள்.
அணையின் நீர்க்கசிவு குறித்து ஆய்வு செய்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அந்த குழு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
நான்கு இடங்களில் கசிவாம்...
இதைத் தொடர்ந்து பரமேஸ்வரன் நாயர் தலைமையிலான குழு பெரியாறு அணைக்கு நேற்று சென்று ஆய்வு மேற்கொண்டது.
அணையின் 9, 10, 17, 18வது பிளாக்குகளில் இந்த நீர்க்கசிவு இருக்கிறதாம். சுர்க்கி எனப்படும் பூச்சு இந்த இடங்களில் பெயர்ந்திருப்பதாக கேரள குழு கூறுகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாயர் தலைமையிலான குழு, நான்கு இடங்களில் புதிதாக நீர்க்கசிவுகள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நீர்க்கசிவுப் பகுதிகள் ஆகும். இதன் மூலம் அணை பலவீனமாக இருப்பது உறுதியாகிறது. இதனால் அணைக்குப் பெரும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.
அணையில் தற்போது 135.1 அடி நீர் இருப்பு உள்ளது.
உலகம் முழுவதுமே எல்லா அணைகளிலும் நீர் கசிவுகள் என்பது சர்வ சாதாரணமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது. அது அணையை பலவீனப்படுத்தும் அளவுக்கு உள்ளதா இல்லையா என்பது தான் பிரச்சனை.
ஆனால், சாதாரண நீர் கசிவை பூதாகரமாக்கிக் காட்ட முயன்று வருகிறது கேரளா.
130 அடியாகக் குறைக்க சதி...
இந்த நிலையில் நீர்க்கசிவு ஏற்பட்டு விட்டதாக கூறி அணையின் நீர்த்தேக்க அளவை 136 அடியிலிருந்து 130 அடியாகக் குறைக்க கேரளா சதி செய்வதாக தெரிகிறது.
கேரள அரசு அனுப்பிய நிபுணர் குழுவின் தலைவரான பரமேஸ்வரன் நாயர் இதுகுறித்துக் கூறுகையில்,
பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், மெயின் அணையின் வெளிப் பகுதியில் நீளவாட்டில் 130 அடியில் 17, 18-வது பிளாக்கில் அதிகளவு நீர்க் கசிவு உள்ளது.
இதுதொடர்பான ஆய்வறிக்கை கேரள மாநில நீர்ப் பாசனத் துறை அமைச்சர் என்.கே.பிரேமசந்திரனிடமும், கேரள முதல்வரிடமும் அளிக்கப்படும்.
அணையில் நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருப்பதால் அணையின் நீர்த்தேக்கத்தை 130 அடியுடன் நிறுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது என்றார்.
இப்படியே படிப்படியாக நீர்த்தேக்க அளவைக் குறைத்துக் கொண்டு வந்து ஒரு கட்டத்தில் அணையில் நீர் தேக்கினால் அபாயம் என்று கூறி அப்படியே முடக்கி விட கேரளா சதி செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.












Click it and Unblock the Notifications