ஆஸ்திரேலியாவில் இந்தியத் தம்பதி மீது இனவெறித் தாக்குதல்
மெல்போர்ன்: மெல்போர்ன் நகரில் வசித்து வரும் இந்தியத் தம்பதி சிலரால் தாக்கப்பட்டது. இவர்கள் மீதான தாக்குதல் இனவெறித் தாக்குதலாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
இரண்டு பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல், இரும்புக் கம்பி, ஸ்டீல் சேர் உள்ளிட்டவற்றால் இந்தியத் தம்பதியைத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான அவர்களின் பெயர் ரோட்னி ராஜ், அவரது மனைவி ரத்னா. புந்தூரா என்ற இடத்தில் உள்ள அவர்களது வீட்டில் நவம்பர் 14ம் தேதி இருவரும் தாக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ரோட்னி கூறுகையில், சம்பவத்தன்று இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு வெளியே எனது நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து நான் எட்டிப் பார்த்தபோது இரண்டு பெண்களும், ஒரு ஆணும் நின்றிருந்தனர்.
அவர்களை வெளியே போகுமாறு கூறி சத்தம் போட்டேன். பின்னர் உள்ளே வந்து விட்டேன். சிறிது நேரத்தில் மீண்டும் சத்தம் கேட்டது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த நான் காரேஜுக்குப் போய்ப் பார்த்தபோது அங்கு நின்றிருந்த எனது காரின் மீது ஒரு ஸ்டீல் சேரை போட்டு வைத்திருந்தது அந்தக் கும்பல்.
பி்ன்னர் எனது லெட்டர் பாக்ஸை எடுத்து ஆராய்ந்து கொண்டிருந்தனர். இதையடுத்து யார் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டபோது, அந்தக் கும்பலில் இருந்த ஆண் வேகமாக ஓடி வந்து என்னை தள்ளி விட்டான். நான் அவனது முதுகைப் பிடித்து நிறுத்தினேன்.
இதையடுத்து இரு பெண்களி்ல் ஒருவர் ஸ்டீல் சேரையும், இனனொரு பெண் இரும்புக் கம்பியையும் எடுத்துக் கொண்டு என்னைத் தாக்கினர். இதனால் நான் நிலை குலைந்து கீழே விழுந்தேன்.
அந்த ஆண் என் மீது ஏறி அமர்ந்து கொண்டு தாக்கினான். எனது முகத்தில் குத்தியபடியே உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று அவன் கத்தினான்.
அப்போது சத்தம் கேட்டு எனது மனைவி கீழே வந்தார். அதைப் பார்த்த அந்தப் பெண்கள் எனது மனைவியிடம் சென்று கேலி செய்தனர். அவரது உடைகளை கழற்ற முயன்றனர். நான் விரைந்து சென்று எனது மனைவியைக் காக்க முயன்றேன். அப்போது என் மீது மேலும் பல அடிகள் விழுந்தன என்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் உறுதிப்படுத்தவில்லை. ஆஸ்திரேலிய மீடியாவிலும் எந்த செய்தியும் வரவில்லை.