தீவிரவாதி ராணாவின் ஜாமீன் கோரிக்கை- அமெரிக்க கோர்ட்டில் ஒத்திவைப்பு
சிகாகோ: இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத சதித் திட்டத்தில் ஈடுபட்டு கைதான பாகிஸ்தானில் பிறந்த கனடியரான தஹவூர் ஹூசேன் ராணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு அமெரிக்க கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
சிகாகோவில் உள்ள கோர்ட்டில், ராணா ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி நான் நோலன், டிசம்பர் 2ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தார்.
முதலில் இந்த வழக்கு நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர் நவம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது டிசம்பர் 2ம் தேதிக்கு விசாரணை தள்ளிப் போயுள்ளது.
ராணாவும், அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லியும் சேர்ந்து லஷ்கர் இ தொய்பாவுடன் இணைந்து இந்தியாவில் மிகப் பெரிய அளவில் தீவிரவாதத் தாக்குதலைத் தொடுக்க திட்டமிட்டிருந்ததாக சிகோகா விமான நிலையத்தில் வைத்து எப்பிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவைப் போல டென்மார்க்கிலும் தீவிரவாதத் தாக்குதலை நடத்த இவர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்தனர்.
இருவரும் சிகாகோவில் வசித்து வருகின்றனர். அங்கு ராணா குடியேற்ற ஆலோசனை ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார்.
ராணா மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்ய எப்பிஐக்கு ஜனவரி 14ம் தேதி வரை அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன. ராணாவுக்கும், ஹெட்லிக்கும் இந்தியாவில் பல்வேறு தரப்பினருடனும் நல்ல அறிமுகம் இருப்பதும் படிப்படியாக வெளியாகி வருகிறது.