தேசபக்தியை காட்டியதற்கு பரிசா இது?-மகேஷ் பட்

மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட்டுக்கும், இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய ஹெட்லிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து தெரிய வந்து பரபரப்பாகியுள்ளது.
இதையடுத்து ராகுல் பட் மும்பையை விட்டு வெளியேறக் கூடாது என போலீஸார் தடை விதித்துளளனர்.
இந்த நிலையில் தற்போது நடந்து வரும் நிகழ்வுகள் தங்களுக்கு பெரும் வேதனையாகவும், பெயரைக் கெடுக்கும் வகையிலும் இருப்பதாக மகேஷ் பட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து மகேஷ் பட் கூறுகையில்,
எனது மகன் ராகுல் பட் தானாகவே முன்வந்து ஹெட்லி குறித்த தகவல்களை போலீஸாரிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால் தற்போது எனது மகன் நடத்தப்பட்டு வரும் விதம் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.
நானும், எனது மகனும், எனது குடும்பத்தினரும் சந்தித்து வரும் கஷ்டங்களை பிரதமரிடத்தில் விளக்கியுள்ளேன். பொறுப்பான ஒரு இந்தியக் குடிமகனாக நடந்து கொண்டதற்காக நாங்கள் சந்தித்து வரும் விளைவுகளை வேதனையுடன் எடுத்துரைத்துள்ளேன்.
சரி செய்ய முடியாத அளவுக்கு எங்களது பெயர் கெடுக்கப்பட்டு விட்டது. மிகப் பெரிய துரோகமாக இதை நாங்கள் கருதுகிறோம்.
பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தவறுகளை சரி செய்ய முன்வர வேண்டும். இல்லாவிட்டால், எந்த இந்தியக் குடிமகனும், தங்களுக்குத் தெரிந்த தகவல்களை போலீஸாரிடம் தெரிவிக்க தயங்கும் மோசமான நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளேன் என்றார் மகேஷ் பட்.
ராகுல் பட் மூலம்தான் ஹெட்லிக்கு பாலிவுட்டில் பலருடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ராகுல் பட்டை இந்த வழக்கில் ஒரு சாட்சியாக தேசிய புலனாய்வு ஏஜென்சி சேர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications