கடற்படையைக் கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்- சிபிஎம்
பரமக்குடி: தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படையினரைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மீன்பிடித் தொழில் பாதுகாப்பு தொடர்பாக வியாழனன்று பரமக்குடியில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கட்சியின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் இரா.ஞானவாசகம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின்னர் என்.வரதராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
1983-ம் ஆண்டிலிருந்து இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடந்த காலம் முழுவதும் தமிழக மீனவர்கள் மிகப்பெரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். தமிழகத்திலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் உள்ளிட்டவை சப்ளை செய்யப்படுகிறது என்ற பெயரால், தமிழக மீனவர்கள் கொடும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
விசைப்படகு பறிமுதல், வலைகள் சேதப்படுத்தப்படுவது, தாக்குதல் மற்றும் உயிர்ப்பலி என மீனவர்கள் ஏராளமாக இழந்தார்கள். இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூடுக்கு 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர். பல குடும்பங்கள் உறவினர்களையும், படகுகளையும் இழந்து நிற்கும் பரிதாபம்.
தற்போது யுத்தம் முடிந்த நிலையில் கெடுபிடி குறையும் என்று மீனவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பலனில்லை. தாக்குதல் தொடர்கிறது.
மீனவர்களை பாதுகாக்க வேண்டும்; உரிய நிவாரணம் வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் மீன்பிடி சங்க நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தை தற்போது நடத்தியுள்ளோம்.
மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள் தொடர்வதை தடுத்து நிறுத்துவது குறித்து உடனடியாக மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த் தையை துவக்க வேண்டும்.
சர்வதேச கடல் எல்லையிலிருந்து 10 கி.மீ. தூரம் வரை சென்று தமிழக மீனவர்கள் சகஜமாக மீன்பிடித்து வந்தார்கள். அத்தகைய சகஜ நிலையை மீண்டும் உருவாக்க இந்திய - இலங்கை அரசுகள் பேசி உருவாக்க வேண்டும்.
மீன்பிடித் தொழிலை ஒழுங்கு படுத்தப் போவதாகக் கூறி, நாடாளு மன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் மத்திய அரசு சட்டம் ஒன்றை கொண்டு வர முயற்சிக்கிறது. மீனவ மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரான இச்சட்டத்தை கைவிட வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தும். இதற்காக அனைத்து ஜனநாயக சக்திகளுடனும், மீனவ மக்களின் அமைப்புகளுடனும் பேசுவோம்.
இக்கோரிக்கைகள் குறித்து டிசம் பர் 2-வது வாரத்தில் மீனவ மக்களின் பகுதிகளில் விரிவான பிரச்சாரம் நடத்தப்படும். நிறைவாக ராமேஸ்வரத்தில் கோரிக்கை மாநாடு நடத்துவது என முடிவு செய்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக ஜனவரி மாதத்தில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இயக்கம் நடைபெறும் என்றார் அவர்.