பயணிக்கு நெஞ்சுவலி-தரையிறங்கிய விமானம்
சென்னை: சென்னையிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் பயணி ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் லங்கா விமானம் இன்று காலை 10.30 மணியளவில் 267 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.
புறப்பட்ட 10 நிமிடங்களில் விமானத்தில் இருந்த ரஃபி அகமது (வயது 52) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமான நிலைய மருத்துவர்கள் விரைந்து சென்று அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். பின்னர் 11.30 விமானம் புறப்பட்டுச் சென்றது.
இறக்கிவிடப்பட்ட போதை பயணி:
இந் நிலையில் சென்னையில் இருந்து பாங்காங் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்றிரவு 12 மணிக்கு புறப்பட தயாரானது.
இந்த விமானத்தில் ஏற முயன்ற தென் கொரியா நாட்டைச் சேர்ந்த ஜிம்சன் என்ற பயணி தள்ளாடியபடி வந்தார். அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தார்.
தமிழ்நாட்டை சுற்றிப்பார்க்க வந்திருந்த ஜிம்சன் நிற்க கூட முடியாத அளவுக்கு அதிக போதையில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து தாய் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அவரை விமானத்தில் ஏற்ற மறுத்தனர்.
இதை ஏற்க மறுத்து ஜிம்சன் கடும் வாக்குவாதம் செய்தார். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஜிம்சனை சில அதிகாரிகள் சமரசம் செய்தனர். அதிக போதையில் பயணம் செய்வது நல்லது அல்ல என்று அறிவுறுத்தினார்கள். நீண்ட நேரத்துக்கு பிறகு ஜிம்சன் சமரசமானார்.
இதையடுத்து ஜிம்சனை விட்டு விட்டு தாய் ஏர்லைன்ஸ் விமானம் பாங்காங் புறப்பட்டுச் சென்றது.
சென்னை ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட ஜிம்சன்
இன்றிரவு 12.15 மணிக்கு பாங்காங் செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications