ஸ்வைன்: மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டுக்கு அனுப்புகின்றனர்-ஜெ. புகார்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் நோயால் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் விஷக் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாகவும்,
பன்றிக் காய்ச்சல் சோதனை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும்தான் மேற்கொள்ளப்படுகிறது என்றும், பன்றிக் காய்ச்சல் நோய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்கே 7 நாட்கள் ஆகிறது என்றும், முகக் கவசங்கள் அளிக்கப்படுவதில்லை என்றும், இம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்காமல், மாத்திரைகளை தந்து அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடக் கூடிய அவல நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் ஒரு வாரத்திற்கு முன்பே கோவை மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து பன்றிக் காய்ச்சல் நோயைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும்,
இலவச பரிசோதனை நிலையங்களை அமைக்கவும் வலியுறுத்திய போதிலும், மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுதலாகிக் கொண்டே செல்கிறது.
பன்றிக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்க வலியுறுத்தியும், பன்றிக்காய்ச்சல் நோய் மேலும் பரவாமல் தடுக்க வலியுறுத்தியும், இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தியும்,
கோவை மாநகர் மற்றும் கோவை புறநகர் மாவட்டக் கழகங்களின் சார்பில், நாளை கழக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ. தலைமையில் கோவை மத்திய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ராமநாதபுரத்தில் சுகாதார சீர்கேடு:
அதேபோல ராமநாதபுரம் நகரத்தில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கியுள்ள நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பாதாள சாக்கடைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், நாளை கழகப் பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ராமநாதபுரம் அரண்மனை வாயில் முன் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications