லண்டன் ஹோட்டல் வழக்கு-ஜெவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் அவசர நோட்டீஸ்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 1991-96ம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்தபோது தனது வருமானத்தை மீறி ரூ.66 கோடி அளவுக்கு சொத்து சேர்த்தார்.
இது தொடர்பாக பின்னர் வந்த திமுக அரசு அவர் மீது வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கும் லண்டனில் ஜெயலலிதா ஹோட்டல் வாங்கிய வழக்கும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.
இந்நிலையில் லண்டன் ஹோட்டல் வழக்கில் போதிய சாட்சியம் இல்லாததால் அந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிகோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
ஆனால் அந்த மனுவை கடந்த செப்டம்பர் 10ம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எம். மல்லிகார்ஜுனய்யா தள்ளுபடி செய்தார்.
சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆஜரானார். வழக்கை நீதிபதி ஜாவித் ரஹீம் விசாரித்தார்.
லண்டன் ஹோட்டல் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, முன்னாள் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன், ஜே.இளவரசி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் 10 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் உத்தரவிட்டு அவர்களுக்கு அவசர நோட்டீஸ் அனுப்ப நீதிபதி ஆணை பிறப்பித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கையும் லண்டன் ஹோட்டல் வழக்கையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க கடந்த 2005ம் ஆண்டில் சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்தது. இதை எதிர்த்து திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு வழக்குகளை சேர்த்து விசாரித்தால் கால தாமதம் ஏற்படும் என்று கருதும் திமுக, லண்டன் ஹோட்டல் வழக்கில் நேரடி ஆதாரங்கள் கிடைக்காததால் அதை கைவிடவும், சொத்துக் குவிப்பு வழக்கி்ல் ஜெயலலிதா அண்ட் கோவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதால் அதில் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்று நினைக்கிறது.
இதனால் தான் லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெற திட்டமிட்டது.