'ராஜபக்சே'..என பெயர் மாற்ற சிங்களர்கள் ஆர்வம்
கொழும்பு: தங்களது பெயர்களுக்குப் பின்னால் ராஜபக்சே என போட்டுக் கொள்ள சிங்களர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனராம். இதனால் பெயர் மாற்றத்தைப் பதிவு செய்ய பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம் அலை மோதுகிறதாம்.
ஈழப் போரின் முடிவைத் தொடர்ந்து சிங்களர்கள் மத்தியில் ஹீரோவாகி விட்டார் ராஜபக்சே. இந்தப் போரின் வெற்றி பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரைப் புதைத்து விட்டு கிடைத்தது என்பதை அவர்கள் பெரிதாக நினைக்கவில்லை.
மாறாக, தமிழ் இனத்தை ஒடுக்கிய ஹீரோவாக பார்க்கப்படுகிறார் ராஜபக்சே. இதனால் அவரது பெயரை தங்களது பெயர்களுக்குப் பின்னால் சேர்த்துக் கொள்ள சிங்களர்களிடையே பேரார்வம் காணப்படுகிறதாம்.
பெயர் மாற்றத்தைப் பதிவு செய்வதற்காக பெரும் கூட்டம் அலைமோதுகிறதாம். இதுகுறித்து பெயர்ப் பதிவு அலுவலக ஆணையர் கூறுகையில், எனது 30 வருட சர்வீஸில் இப்படி ஒரு பெயர் மாற்ற கூட்டத்தை நான் பார்த்ததில்லை என்கிறார்.
இதற்கிடையே, ராஜபக்சே என்ற பெயருடன் வருபவர்களுக்கு விசேஷ சலுகைகள் வழங்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்களில் ராஜபக்சே என்ற பெயருடன் இருப்பவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை அள்ளிக் கொடுக்கிறார்களாம். இதற்காக பலரும் தங்களது பெயர்களுக்குப் பின்னால் ராஜபக்சே என்று சேர்த்துக் கொள்ள ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.