அரசு பஸ் கவிழ்ந்து 2 மாணவர் பலி- 35 பேர் காயம்
ராசிபுரம்: மல்லூர் அருகே அரசு டவுன் பஸ், மின் கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில், பள்ளி மாணவர்கள் இருவர் பலியாயினர். 35 பேர் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ், மலையாம்பாளையம் அருகே குறுகிய சாலை வழியாக சென்றது. அப்போது, பஸ் வளைவில் திரும்பிய போது, அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில், நிலைகுலைந்த பஸ் சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.
பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த கிராம மக்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில், மல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவன் சின்னராசு (16) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். மேலும், மற்றொரு மாணவன் மணிகண்டன், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான்.
பஸ் டிரைவர் ராமசாமியை போலீசார் கைது செய்தனர்.