முகாம்களில் உள்ள தமிழர்கள் 1ம் தேதி விடுவிப்பு!: இலங்கை அறிவிப்பு
இலங்கை அதிபரின் முதன்மை ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சே இன்று காலை வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் இதனை அறிவித்துள்ளார்.
முள்கம்பி வேலிகள் தகர்க்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்கள் விரும்பிய இடங்களுக்கு செல்ல இதன் மூலம் அனுமதியளிக்கப்படுகிறது எனவும், ஜனவரி 31க்கு முன்னதாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மறுகுடியேற்றப்படுவர் என்றும் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
"இந்த அறிவிப்பின் மூலம் முட்கம்பிகள் தகர்க்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று வரலாம்" என பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இலங்கையில் தேர்தல் நெருங்குவதால், இந்த முடிவை உடனடியாக அரசு வெளியிட்டுள்ளதாக தமிழர் அமைப்புகள் கூறியுள்ளன.
மாவீரர் தினம் நெருங்கும் தருவாயில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
காரணம் எதுவாக இருந்தாலும், முள்வேலி சிறையிலிருந்து மக்கள் மீண்டு அவரவர் தாய்மண்ணுக்குத் திரும்புவது குறித்த இந்த அறிவிப்பு தமிழ் உறவுகளிடையே சிறு ஆறுதலைத் தந்துள்ளது.