முதல் முறையாக பாஸ்போர்ட் பெற்ற நேபாள மன்னர்
காத்மாண்டு: நேபாள நாட்டு முன்னாள் மன்னர் ஞானேந்திரா தனது வாழ்க்கையிலேயே முதல் முறையாக இப்போதுதான் பாஸ்போர்ட் பெற்றுள்ளார்.
நேபாள மன்னர் ஞானேந்திராவிடம் இதுவரை பாஸ்போர்ட் கிடையாது. கடந்த ஆண்டு அவரது மணிமகுடம் பறிக்கப்பட்டது. இப்போது சாதாரண மக்களைப் போல அவரும் ஒருவராகி விட்டார்.
தற்போது 64 வயதாகும் ஞானேந்திரா முதல் முறையாக பாஸ்போர்ட் பெற்றுள்ளார். ஞானேந்திர ஷா என்ற பெயரில் அவருக்கு பாஸ்போர்ட் அளிக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு ஜூன் மாதம் அரண்மனையை விட்டு வெளியேறினார் ஞானேந்திரா.
இதுகுறித்து நேபாள நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட அரசுத் துறை உயர் பொறுப்புகளை வகித்தவர்களுக்கு தூதரக பாஸ்போர்ட் வழங்குவது வழக்கம். அந்த அடிப்படையில் ஞானேந்திராவுக்கும் தூதரக பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஞானேந்திரா வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைப் பரிசீலித்து பாஸ்போர்ட் தரப்பட்டுள்ளது என்றார்.
முன்பு மன்னராக இருந்தபோது பாஸ்போர்ட்டே இல்லாமல் இருந்தாராம் ஞானேந்திரா. இப்போதுதான் முதல் முறையாக அவர் பாஸ்போர்ட் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.