மதுராந்தகத்தில் சிக்னல் கோளாறு-ரயில்கள் தாமதம்
சென்னை: மழை காரணமாக மதுராந்தகம் ரயில் நிலையத்தில் சிக்னலில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னை ரயில்கள் பெரும் தாமதத்தை சந்தித்தன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
மதுராந்தகம் ரயில் நிலையம் அருகில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் சிக்னல் கிடைக்காமல் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தானாக இயங்கக் கூடிய சிக்னலில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னை நோக்கி வந்த அனைத்து ரயில்களும் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன.
பின்னர் சிக்னலில் ஏற்பட்ட கோளாறை தொழில் நுட்ப கலைஞர்கள் சரி செய்தனர். அதன் பிறகு தென் மாவட்டத்தில் இருந்து வந்த ரயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு வந்தன. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக எழும்பூர் ரயில் நிலையத்துக்கு ரயில்கள் வந்து சேர்ந்தன.
திருச்சி மலைக்கோட்டை, நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர், ராமேஸ்வரம், அனந்தபுரி உள்ளிட்ட எல்லா ரயில்களும் தாமதமாக வந்தன.
இதன் காரணமாக பயணிகளும், அவர்களை வரவேற்க காத்திருந்த உறவினர்களும் பெரும் அவதியடைந்தனர்.