எதிர்க்கட்சித் தலைவர்: அத்வானிக்கு பதில் சுஷ்மா
ஹைதராபாத்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக அத்வானி விருப்பம் தெரிவித்துள்ளார். இப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள சுஷ்மா ஸ்வராஜ் இந்தப் பொறுப்பை ஏற்கலாம் என்று தெரிகிறது.
ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு,
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் பதவி காலம் முடிவுறுவதையொட்டி அடுத்த தலைவராக மகாராஷ்டிர பாஜக தலைவர் நிதின் கட்காரி தேர்வு செய்யப்படலாம் என்பது யூகத்தின் அடிப்படையில் வெளியான செய்தியாகும்.
புதிய தலைவர் குறித்து கட்சியில் இதுவரை இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. புதிய தலைவர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படுவார். புதிய தலைவரைத் தேர்வு செய்யும் வரை ராஜ்நாத் சிங் தலைவர் பதவியில் தொடந்து நீடிப்பார். புதிய தலைவரைத் தேர்வு செய்வது குறித்து கட்சிதான் இறுதி முடிவு எடுக்குமே தவிர வேறு யாரும் இது குறித்து முடிவு செய்ய முடியாது. (அதாவது ஆர்எஸ்எஸ் தலையிடாதாம்.. பாஜகவே முடிவெடுக்குமாம்)
கர்நாடகத்தில் கட்சியில் ஏற்பட்ட உட்பூசலைத் தொடர்ந்து தென் மாநிலங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். கர்நாடக விவகாரம் கட்சித் தலைமைக்கு மனவேதனையை அளித்தது. எனினும் பாஜக தேசிய கட்சி என்பதால் இந்த விவகாரத்தை எளிதில் கையாண்டது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள அத்வானி, அப்பதவியிலிருந்து விரைவில் விலக விருப்பம்
தெரிவித்துள்ளார் என்றார்.
தற்போது மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள சுஷ்மா ஸ்வராஜ் அப்பொறுப்பை ஏற்கலாம் என்று சூசகமாகத் தெரிவித்தார்.
பெங்களூரில் நாளை ஆர்.எஸ்.எஸ். மாநாடு:
கர்நாடக பாஜகவில் பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில் பெங்களூரில் நாளை ஆர்எஸ்எஸ் மாநாடு நடக்கிறது.
இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பங்கேற்கிறார்.
பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நடக்கும் இம் மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சீருடையுடன் கலந்து கொள்கின்றனர்.