வாலிபர் மாயம்-டி.எஸ்.பி, 11 பேருக்கு சம்மன்
நெல்லை: வாலிபர் மாயமான வழக்கில் டி.எஸ்.பி. உள்ளிட்ட 12 பேர் நேரில் ஆஜராகுமாறு தென்காசி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
கடையநல்லூரை சேர்ந்தவர் முகமது மசூது. சீட்டு கம்பெனி நடத்திய அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதன் மூலம் ஏற்பட்ட கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறினார்.
இந்நிலையில் 2005ம் ஆண்டு நவம்பரில் முகமது மசூது உள்பட 4 பேர் கன்னியாகுமரி செல்வதாக கடையநல்லூரில் ஒரு வாடகை கார் பிடித்தனர். வழியில் டிரைவரை தாக்கி ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர்.
அதன்பிறகு ஆரல்வாய் மொழி அருகே செல்லும்போது எதிரே வந்த மற்றொரு காரில் விருதுநகர் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியை தாக்கி அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை பறித்து சென்றனர்.
பின்னர் டிரைவரிடம் இதை யாரிடமும தெரிவிக்க கூடாது என மிரட்டி காரை கொடுத்து அனுப்பினர். இதுகுறித்து அப்போதைய இன்ஸ்பெக்டர் லட்சுமணராஜ் விசாரித்து வந்தார்.
கன்னியாகுமரி எஸ்பி ராமசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் முகமது உள்பட 4 பேரையும் கைது செய்தனர். முகமது மசூதுவை கீறிப்பாறைக்கு அழைத்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. இது குறித்து அவரது உறவி்னர்கள் போலீஸ் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளுக்கு தந்தி அனுப்பினர்.
இதையடுத்து தனிப்படையினர் 3 பேரை மட்டும் எஸ்பியிடம் ஓப்படைத்தனர். முகமது மசூது விசாரணையின்போது தப்பி சென்றதாக அறிக்கை அளித்தனர்.
ஆனால் அவர் வீட்டிற்கும் செல்லவில்லை. விசாரணையின் போது முகமது மசூது இறந்திருக்கலாம் என கருதிய அவரது உறவினர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், ஹேப்பியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி இவ்வழக்கினை நெல்லை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிட்டனர். அவர்கள் கடந்த ஓன்றரை ஆண்டாக வி்சாரணை நடத்தினர்.
மேலும் ஆர்டிஓ விசாரணையும் நடந்தது. அதில் டிஎஸ்பிக்கள் பிரதாப் சிங், சந்திரபால், ஈஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணராஜ், முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாடசாமி, சத்யராஜ், ஏட்டுகள் முருகன், சிவன், ஸடீபன், மைக்கேல், முத்து ஆகிய 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில் டிஎஸ்பி சந்திரபால் உள்பட 12 பேரும் தென்காசி கோர்ட்டில் டிசம்பர் 14ம் தேதி ஆஜராகும்படி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications