ராஜ்யசபாவில் பாஜக எம்பிக்கள்-அமர்சிங் கைகலப்பு

லிபரான் கமிஷன் அறிக்கையை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்தவுடன், பாஜக எம்பி்க்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷம் எழுப்பினர்.
அப்போது சமாஜ்வாடிக் கட்சி எம்பிக்கள் பாஜக எம்பிக்களுக்கு எதிராக ஏதோ கூறினர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
பாஜகவைச் சேர்ந்த அலுவாலியா சமாஜ்வாடி கட்சி எம்பிக்களை நோக்கிப் பாய்ந்தார். இரு தரப்பினருக்கும் இடையே அடிதடி எழும் சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து சமாஜ்வாடிக் கட்சியின் தலைவரான அமர்சிங் இடையில் தலையிட்டு மோதலை தடுக்க முயன்றார். ஆனால், அவரையே பாஜக எம்பிக்கள் தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இரு தரப்பினரும் சபாநாயகரின் இருக்கைக்கு அருகே அடிதடி, தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். இதையடுத்து மூத்த எம்பிக்கள் விரைந்து வந்து இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையி்ல், எங்களுக்கு ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்ப முழு உரிமை உண்டு. அதை எப்படி அமர்சிங்கும் அவரது கட்சி எம்பி்க்களும் தடுக்கலாம் என்றார்.
நானும் ராம பக்தன் தான்:
நிருபர்களிடம் அமர்சிங் கூறுகையில், மாநிலங்களையில் யாரும் எந்த மதத்தையும் ஆதரித்து கோஷமிடக் கூடாது. ஒருவர் ஜெய் ஸ்ரீராம் என்பார் இன்னொருவர் பதிலுக்கு அல்லாஹூ அக்பர் என்பார். மதத்தை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்துவிட்டால் அவையை நடத்த முடியுமா?. அதைத் தான் நாங்கள் தட்டிக் கேட்டோம்.
நான் ஸ்ரீராமருக்கு எதிரியல்ல. நானும் ராம பக்தன் தான். மற்றபடி அவையில் இன்று நடந்த சம்பவத்துக்காக நான் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.
அமர் சிங்கைக் கைது செய்ய தடை இல்லை...
இதற்கிடையே, குறிப்பிட்ட சில கம்பெனிகளுக்கு மட்டும் கான்டிராக்டுகளை ஒதுக்கியதன் மூலம் ரூ. 500 கோடி லாபம் சம்பாதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமர்சிங்கைக் கைது செய்வதை தடை செய்ய முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அக்டோபர் 15ம் தேதி கான்பூர் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்படக் கூடிய சூழ்நிலை எழுந்தது.
இதைத் தொடர்ந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தடை கோரினார் அமர்சிங்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் யுதீந்திர சிங் மற்றும் எஸ்.கே. திரிபாதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அமர்சிங்கின் கைதுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டனர்.
வழக்கு சாதாரணமானதல்ல, ரூ. 500 கோடி பணத்தை முறைகேடாக குவித்துள்ளதாக வழக்கு கூறுகிறது. எனவே இடைக்கால தடை விதிக்க இயலாது என்று நீதிபதிகள் கூறி அமர் சிங்கின் கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.












Click it and Unblock the Notifications