மீண்டும் 'ரா'வுக்கு திரும்ப விரும்பிய கர்கரே!
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை கர்கரே கையாண்ட விதம் குறித்து மீடியாக்களில் வந்த செய்தியால் இந்த முடிவுக்கு அவர் வந்திருந்தார் என்றும் காட்கில் கூறியுள்ளார்.
இதுகுறித்து காட்கில் கூறுகையில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னை ஒரு வில்லன் போல பலரும் சித்தரித்து வந்ததால் பெரும் விரக்தி அடைந்திருந்தார் கர்கரே. கொல்லப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு என்னிடம் அவர் பேசுகையில், பேசாமல் மீண்டும் ராவுக்குத் திரும்பி விடலாம் போலத் தோன்றுகிறது என்று கூறினார்.
மீடியாக்களில் தன்னைப் பற்றி விமர்சித்து எழுதப்பட்டதை கர்கரேவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால்தான் அப்படிக் கூறினார் என்றார் காட்கில்.
கர்கரேவும், காட்கிலும் கிட்டத்தட்ட 23 ஆண்டு கால நட்பைக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீடிக்கும் விசாரணை-கவிதா அதிருப்தி
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஒரு வருடமாகப் போகிறது. இன்னும் அதுதொடர்பான விசாரணை நீடித்துக் கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியையும் தரவில்லை, திருப்தியையும் தரவில்லை என்று அதிருப்தி வெளியிட்டுள்ளார் ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா கர்கரே.
இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், விசாரணையின் போக்கு எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இன்னும் நடந்து கொண்டிருப்பது விரக்தியாக உள்ளது. எப்போது எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று தெரியவில்லை.
எனது கணவர் கொல்லப்பட்டபோது அணிந்திருந்த புல்லட் புரூப் உடையைக் காணவில்லை என்று அறிந்தபோது நான் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தேன். உண்மையில் அது இந்த வழக்குக்கு மிகப் பெரிய ஆதாரம் ஆகும். நமது பாதுகாப்பு முறை முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் மும்பையில் தாக்குதல் நடந்தது.
இதெல்லாம் எப்போது மாறும் என்று தெரியவில்லை. அல்லது மாறாமலேயே இருக்குமா என்பதும் புரியவில்லை.
எனது கணவரின் மரணத்திற்குப் பின்னர் மாநில அரசு பல வாக்குறுதிகளை எங்களுக்கு அளித்தது. அதில் பல நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் கவிதா கர்கரே.