இன்று சுகோயில் பறக்கிறார் பிரதீபா பாட்டீல்

இதற்காக வழக்கமாக அணியும் சேலைக்குப் பதில், அவர் ஜி-சூட் அணிவார். ஜி-சூட் என்பது விண்வெளி வீரர்கள், போர் விமானங்களில் பறப்போர் அணியும் விசேஷ உடை. சூப்பர்சானிக் விமானங்களில் பறப்போர் இந்த உடையைத் தான் அணிந்தாக வேண்டும்.
இந்த உடையில் இன்று பிரதீபா பாட்டீல் சுகோய் விமானத்தில் பறக்கவுள்ளார். இன்று காலை புனே வந்த பிரதீபா பாட்டீல், அங்கு சுகோய் பயணத்தை மேற்கொள்கிறார்.
சுகோய் போர் விமானத்தின் காக்பிட்டின் பின்பகுதியில், அமர்ந்து பயணம் செய்யவுள்ளார் பிரதீபா பாட்டீல்.
குடியரசுத் தலைவருக்கான ஜி-சூட் உடையைக் கண்டுபிடிப்பதற்குள் திணறிப் போய் விட்டதாம் விமானப்படை. காரணம், வழக்கமான ஜி-சூட் உடைகளை அணிபவர்கள் நல்ல உயரமும், திடகாத்திரமுமான உருவம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் பிரதீபா பாட்டீலுக்குப் பொருத்தமான ஜி-சூட் உடை கிடைக்காமல் தவித்துப் போய் விட்டனராம்.
பின்னர் ஒரு வழியாக ஜி-சூட் உடையை ரெடி செய்து வைத்து விட்டனர்.
மேலும், விமானப் படையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு குழு பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து விமான பயணம் குறித்து விளக்கியுள்ளனர்.
விமானத்தின் காக்பிட்டுக்குள் ஏறிச் செல்வதை விட பின்பகுதியில் ஏறுவதுதான் சிரமமானது என்பதால் அதுகுறித்து பிரதீபாவுக்கு வீடியோ காட்சி மூலம் தெளிவாக விளக்கப்பட்டதாம்.
2வது முன்னோடி...
சுகோய் விமானத்தில் பறந்த முதல் இந்திய அரசுத் தலைவர் என்ற பெருமை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு உண்டு. 2006ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி அவர் சுகோய் விமானத்தில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் பறந்து அசத்தினார்.
இதையடுத்து தற்போது சுகோயில் பறந்த 2வது குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பிரதீபா பாட்டீல் பெறவுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், சுகோய் விமானத்தில் பறந்த முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற சாதனையையும் அவர் படைக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications