5வது மாடியிலிருந்து குதித்து முன்னாள் டிஎஸ்பி தற்கொலை
சென்னை: சென்னை மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பாதுகாப்பு அதிகாரி, உடல்நலக்குறைவு காரணமாக அலுவலகத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சீர்காழி, கொள்ளிடம் அருகே உள்ள ஆனைக்காரன் சத்திரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (58). இவர் தமிழக மின்சார வாரியத்தில் விஜிலென்ஸ் பிரிவில் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து, கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், திங்கள்கிழமையன்று (நேற்று) சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு ராமசந்திரன் வந்தார். அங்கு நண்பர்களுடன் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தார்.
காலை 11:30 மணியளவில் திடீரென அலுவலகத்தின் 5வது மாடிக்கு சென்ற ராமச்சந்திரன், லிப்ட் அருகே உள்ள ஜன்னல் வழியாக கீழே குதித்துவிட்டார். இதில் ராமச்சந்திரனின் தலை மற்றும் மார்பு எலும்புகள் நொறுங்கின.
அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாக ராமசந்திரனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ராமச்சந்திரனின் உயிர் பிரிந்தது.
சிந்தாதிரிபேட்டை போலீசார், ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துகொண்ட ராமச்சந்திரன், மின்வாரிய விஜிலென்ஸ் ஏ.டி.ஜி.பி., பாலச்சந்தருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'சர்க்கரை, ரத்தகொதிப்பு, சிறுநீரக பிரச்னை ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். காலை வெட்டி எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தற்கொலை செய்து கொள்கிறேன். எனது இந்த முடிவுக்கு யாரும் காரணம் கிடையாது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராமச்சந்திரனின் மகன் அருண் சரவணன், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். அவரது இரு மகள்களில் ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் அமெரிக்காவிலும் வசிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications