மோருக்கு பதில் பினாயில் குடித்த ஆற்காடு.. விஜயகாந்த்

தொடர் மின்வெட்டு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, ரேஷன் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை கண்டித்து மாவட்ட தேமுதிகவினர் நடைபயணம் மேற்கொள்வார்கள் என்று தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்தது.
அதன்படி, கள்ளக்குறிச்சியில் இருந்து இன்று நடைபயணம் புறப்பட்டு நாளை விழுப்புரத்தை அடைய கட்சியினர் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நடை பயணம் செல்ல போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். மேலும், தேமுதிக நிர்வாகிகளை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.
இதனால், மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் 500 தொண்டர்கள் திடீரென கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் திரண்டு, திடீர் சாலைமறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து விஜய்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
விழுப்புரம் மாவட்டத்தில் என்னுடைய ஆணைக்கிணங்க, வரலாறு காணாத மின்வெட்டையும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தையும், ரேஷன் கடைகளின் ஊழலையும், கேஸ் சிலிண்டர்களுக்கு அளித்த மானியத்தை ரத்து செய்ததையும் கண்டித்து, கள்ளக்குறிச்சியிலிருந்து மாவட்டச் செயலாளர் எல்.வி.வெங்கடேசன் தலைமையில் 24ம் தேதி காலையில் கண்டன நடைபயணம் புறப்படுவதாக இருந்தது.
ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொள்வதாக இருந்தனர். முன்கூட்டியே இந்த நடைபயணத்தில் அரசின் அனுமதி கேட்டிருந்தும் இறுதி வரை தராமல் இழுத்தடித்து முந்தின நாள் இரவு அனுமதி இல்லை என்று காவல்துறையினர் அறிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல், மாவட்டம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரால் கைது செய்தனர். திருச்சி நெடுஞ்சாலை உட்பட கள்ளக்குறிச்சி நோக்கி வந்த அனைத்து நெடுஞ்சாலைகளிலும் சோதனைச்சாவடிகள் அமைத்து பஸ்களையும், வாகனங்களையும் சோதனையிட்டு பொது மக்களுக்கு தொந்தரவு செய்து,
சந்தேகம் என்ற பெயரில் தொண்டர்களையும், பொதுமக்களையும் பாதி வழியில் இறக்கிவிட்டனர். மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் வண்டிகளில் ரோந்து செய்து யாரும் இந்த நடைபயணத்தில் கலந்து கொள்ளாதவாறு பார்த்துக் கொண்டனர்.
இருப்பினும் சுமார் 2,000 தொண்டர்களும், மகளிர் அணியினரும், நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.ஒரு அரசின் கையாலாகத்தனத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி என்ற முறையில் மக்கள் பிரச்சினைக்காக அறப்போராட்டம் நடத்துவது இயல்பு. அந்த ஜனநாயக அடிப்படையில் தான் தேமுதிக இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டது. இது எந்த வகையில் தவறானதாகும்?.
இதே தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் ஆட்சிக்காலத்தில் ஆர்.எம்.வீரப்பன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபொழுது திருச்செந்தூர் கோயிலில் வேல் காணாமல் போய்விட்டது என்றும், அன்றைய நிர்வாக அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை கொலை செய்யப்பட்டு குளியல் அறையில் தொங்க விடப்பட்டார் என்றும், அவற்றைக் கண்டித்து மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு நீதி கேட்டு நெடும் பயணம் போனார்.
இந்த நெடும் பயணம் ஆட்டம், பாட்டத்துடன் நடந்தது என்பதும், இன்றைய அமைச்சர் ஆற்காட்டார் மோருக்கு பதிலாக, பினாயில் குடித்து அவதிப்பட்டார் என்பதும் அன்றைய தினம் கேலியாக பேசப்பட்டது.
அண்மையில் கூட முதலமைச்சர் கருணாநிதி, அனைத்து கட்சியினரையும் சேர்த்துக் கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கான நெடுஞ்சாலைகளில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்.
இதே அடிப்படையில் தான் பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ எவ்வித இடையூறும் இல்லாமல் தேமுதிக சார்பில் சாலையோரமாக கட்சி தொண்டர்கள் நடைப்பயணம் மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டது. அரசு அனுமதி தர மறுத்தது மட்டுமல்ல, கடைசி வரை பதிலளிக்காமல் காவல்துறை இழுத்தடித்தது ஏன்?.
நடைபயணத்திற்குரிய ஏற்பாடுகளை தங்கள் உழைத்த பணத்தில் கட்சித் தொண்டர்கள் செய்து முடித்த பின்னர், மேலிடத்து உத்தரவு என்று காவல்துறையினர் அனுமதி மறுத்ததை கழகத்தின் சார்பில் கண்டிக்கிறேன்.
எந்த பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் போராட்டம் நடத்துவதை கொள்கை முறையாக நாங்கள் கொண்டிருக்கிறோம். ஆனால், அதற்கு நேர்மாறாக அரசாங்கம் காவல்துறையை வைத்து போகின்ற பஸ்களையும், வாகனங்களையும் சோதனை என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்தது முறையாகுமா?.
இன்றைய கருணாநிதி அரசு தங்களது ஆட்சியை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என்ற போக்கில் ஜனநாயக விரோதமாக நடந்து கொள்வது மட்டுமல்ல. மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?.
மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளையும் செய்யாமல் அதே நேரத்தில் அவற்றை சுட்டிக்காட்டவும் எதிர்க்கட்சிக்கு அனுமதி தராமல் இன்றைய திமுக ஆட்சி சர்வாதிகாரப் போக்கை கடைபிடித்து வருகிறது. அதற்கு காவல்துறை பயன்படுத்தப்படுகிறது.
அமைதியான முறையில் ஒரு அறப் போராட்டத்தை நசுக்க காவல் துறையை ஏவிவிடுவது ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கும் முயற்சியாகும். முதலமைச்சர் கருணாநிதிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா?.
இத்தனை இடையூறுகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் இடையே இந்த நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று அக்கறையோடு முன்வந்த தேமுதிக தொண்டர்களையும், ஏழைத் தாய்மார்களையும் உறுதுணையாக இருந்த பெரியோர்களையும் உளமார பாராட்டுகிறேன்.
காவல்துறை கைது செய்து எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சிறையில் அடைக்கட்டும், அதைப் பற்றி கவலைப்பட மாட்டோம் என்று தேமுதிகவை சேர்ந்த இளைஞர்களும், மகளிர் அணியினரும் இந்த நடைபயணத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் போன்ற இடங்களில் திரளாக கூடி இந்த அறப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்ததற்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசின் இத்தகைய அடக்குமுறைகளைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம். இனியும் மக்கள் பிரச்சனைக்காக எந்த விளைவுகள் ஏற்பட்டாலும் திமுக அரசை எதிர்த்து போராடத் தயங்க மாட்டோம் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.












Click it and Unblock the Notifications