முல்லைப் பெரியாறு: சரத்குமார் நடைபயணம்
சென்னை: முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகமும், கேரளாவும் இணைந்து சமரசத் தீர்வை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொள்வோம் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இப்போது இந்தப் பிரச்னை திசைமாறி உள்ளது. புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளமும், அதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன.
தமிழகத்தைப் பொருத்தவரை மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மக்கள் விவசாயம், குடிநீருக்காக முல்லைப் பெரியார் நீர்த் தேக்கத்தையே நம்பி இருக்கிறார்கள். தண்ணீர் வராவிட்டால், இந்த 5 மாவட்டங்களும் வறட்சிக் காடாக மாறிவிடும்.
எனவே, முல்லைப் பெரியாறு பிரச்னையில் இரு மாநில அரசுகளும் சமாதானப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும். அமைச்சர்கள், அதிகாரிகள், நிபுணர்கள், விவசாயிகள் அடங்கிய பேச்சுவார்த்தை குழு மூலம், சுமுகமாகப் பேசி தீர்வு காண முயல வேண்டும்.
இதனை வலியுறுத்தியும், இப்பிரச்னையின் உண்மை நிலையை மக்களுக்கு விளக்கிடும் வகையிலும் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெறும்.
டிசம்பர் 19ம் தேதி தேனியில் தொடங்கி, வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், க. புதுப்பட்டி, கம்பம், கூடலூர் வழியாக செல்லும் நடைபயணம், டிசம்பர் 20ம் தேதி லோயர்கேம்பில் நிறைவு பெறும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications