நிபந்தனையுடன் ஈழத் தமிழர் ஆதரவு கூட்டங்களுக்கு அனுமதி
சென்னை: தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர் ஆதரவு கூட்டங்களை நடத்த காவல்துறை சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
இன்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளாகும். நாளை விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மற்றும் ஈழத் தமிழர்கள் அனுசரிக்கும் மாவீரர் நாளாகும்.
இந்த நிலையில் தமிழகத்திலும் சென்னை உள்பட மாநிலமெங்கும் பல்வேறு ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்தக் கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
நாளை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் "மாவீரன் நாள் பொதுக்கூட்டம்'' என்ற பெயரில் ஈழத்தமிழர் ஆதரவு பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை சார்பில் இந்த பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. சென்னையில் எம்.ஜி.ஆர்.நகரில் நூறடி ரோடு மார்க்கெட் அருகில், இந்த கூட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்க மறுத்து விட்டதாக செய்தி வெளியானதாகவும், ஆனால் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு விட்டதாகவும் போலீசார் நேற்று மாலை தெரிவித்தனர்.
மேலும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக கருத்துக்கள் எதையும் கூட்டத்தில் பேசக்கூடாது என்று போலீஸார் இக்கூட்டங்களுக்கு நிபந்தனை விதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications