பிரசாரம்: ஸ்டாலின், ஜெ. வருகை- களை கட்டுகிறது திருச்செந்தூர் தேர்தல் களம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட துணை முதல்வர் மு.க ஸ்டாலின் வருகிறார். அதேபோல அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை ஆதரித்து ஜெயலலிதாவும் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது.
தமிழகத்தில் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 19ம் தேதி நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அந்த தொகுதிகள் அடங்கிய தூத்துக்குடி, திருவண்ணாமலை மாவட்டங்களில் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளன.
இடைத் தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூரில் தி்முக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன், அதி்முக சார்பில் அம்மன் நாராயணன் நிறுத்தப்பட்டுள்ளனர். திமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
மத்திய, மாநில அமைச்சர்களும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியனரும் திமுவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா இரு தொகுதிகளிலும் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேரிக்க உள்ளார். அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் பிரச்சார திட்டம் தயாராகி வருகிறது.
திருச்செந்தூர் தொகுதியில் திருச்செந்தூர், காயல்பட்டிணம், உடன்குடி மற்றும் மீனவ கிராமங்களில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார். தலைவர்கள் பிரசாரத்திற்கு வர இருப்பதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இரு தொகுதிகளிலும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இதுவரை 4 பேர் வேட்பு மனு தாக்கல்:
இதற்கிடையே, திருச்செந்தூர் இடைத்தேர்தலில் போட்டியிட சின்னமனூர் மாணவர், டாக்டர் உள்ளிட்ட 4 பேர் தூத்துக்குடி ஆர்டிஓ துரை ரவிசந்திரனிடம் சுயேட்சையாக மனு தாக்கல் செய்தனர்.
இங்கு மனுதாக்கலின் முதல் நாளன்று தூத்துக்குடி ஆர்டிஓ துரை ரவிசந்திரனிடம் சேலம மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த டாக்டர் பத்மராஜன் மனுத் தாக்கல் செய்தார். இரண்டாம் நாளான நேற்று ராசிபுரம் புதுப்பாளையத்தை சேர்ந்த டாக்டர் மனோகரன் என்பவர் சுயேட்சையாக மனு தாக்கல் செய்தார். இவர் மஸ்காட்டில் டாக்டராக பணிபுரிந்து தற்போது மீண்டும் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
இவரை தொடர்ந்து தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சங்கரபுரம் பஞ்சாயத்துத் தலைவர் ராமையா என்பவரது மகன் நாகமணி செந்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் பெங்களூர் சட்ட கல்லூரியில் எல்எல்பி 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஏற்கனவே 3 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். தொடர்ந்து கோவையை சேர்ந்த நூர் முகமது என்பவரும் மனு தாக்கல் செய்துள்ளார்.
இவர்களுடன் சேர்ந்து இதுவரை திருச்செந்தூர் தொகுதியில் 4 பேர் சுயேட்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வரும் 30ம் தேதியன்று மனு தாக்கல் செய்ய இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications