நெல்லை கோர்ட்டுக்கு 100 கம்ப்யூட்டர்கள்
நெல்லை: நீதிமன்ற தகவல்களை உடனுக்குடன் பெற அனைத்து நீதிமன்றங்களும் கம்ப்யூட்டர் மயமாகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்ட கோர்ட்டுக்கு 100 கம்ப்யூட்டர்கள் ஒதுக்கப்படுகின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் நீதிமன்றங்களில் விரைவான தகவல் பரிமாற்றத்துக்கு கம்ப்யூடடர் வசதியை ஏற்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி சென்னை ஐகோர்ட் முழுவதும் கம்ப்யூட்டர் வசதி செய்யப்பட்டது. இதனால் தகவல்களை பெறுவது எளிதாக்கப்பட்டது.
இதேபோல் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள், சப் கோர்ட்டுகள், முன்சிப் கோர்ட்களிலும் கம்ப்யூட்டர் மூலமே தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்தது.
முதல்கட்டமாக நீதிபதிகளுக்கு 3 மாத கம்ப்யூட்டர் பயிற்சிஅளிக்கப்பட்டு லேப்டாப் கம்ப்யூட்டரும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற அலுவலக ஊழியர்களுக்கும் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஸ்டேனோ, டைப்பிஸ்டுகளுக்கும் தற்போது கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லை ஓருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வாளகத்தில் உரி்மையியல் மற்றும் குற்றவியல் சப் கோர்ட் என 20 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஒரு நீதிமன்றத்துக்கு 5 கம்ப்யூட்டர் வீதம் நிறுவப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட பணியாக அனைத்து நீதிமன்றம் மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் மின்சார இணைப்பு கொடுக்கும் பணி முடிவடைந்தது.
இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இருந்து வரும் அனைத்து நீதிமன்ற தகவல்களை பெறவும், அனுப்பவும் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற கட்டிடங்களில் குளிரூட்டப்பட்ட ஓருங்கிணைந்த கம்ப்யூட்டர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க கம்ப்யூட்டர் என்ஜினியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல்கட்டமாக நீதிமன்றங்களுக்கு தேவையான 100 கம்ப்யூட்டர்கள் நெல்லை நீதிமன்றத்துக்கு வந்துள்ளன. இதுபோல் மாவட்டத்தில் உள்ள ஏனைய நீதிமன்றங்களான சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், சிவகிரி, ஆகிய நீதிமன்றங்களிலும் கம்ப்யூட்டர் பொருத்தும் பணி நடந்து வருகிறது.