தென்காசி அருகே தலித் பள்ளி ஆக்கிரமிப்பு - மக்கள் முற்றுகை
தென்காசி அருகேயுள்ள இலத்தூர் சித்ராபுரத்தில் 1963ம் ஆண்டு அப்பகுதி தலித் மக்கள் சார்பில் அரிஜன தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டது. இப்பள்ளியை ஆழ்வாரப்பன் என்ற நபரின் கண்காணி்ப்பில் நடத்திட அம்மக்கள் அனுமதியும் வழங்கினர்.
இந்நிலையில் ஆழ்வாரப்பன் தற்போது ஓய்வு பெற்று விட்டதால் பள்ளி நிர்வாகத்தை தனது மகள் வசம் ஓப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் சார்பில் தொடங்கப்பட்ட பள்ளியை தங்கள் சமுதாயத்திடம் ஒப்படைக்காமல் தனது மகள் வசம் ஆழ்வாரப்பன் ஓப்படைத்ததை கண்டித்து அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 23ம் தேதி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளியை பொதுமக்கள் இழுத்து மூடிவிட்டு சென்றனர்.
இதையடுத்து தாசில்தார், போலீசார் அக்கிராமத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது 28ம் தேதி செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கூறினர். அதன்பின் அப்பகுதி பொதுமக்கள் சாவியை வழங்கினர்
அதன்படி இன்று செங்கோட்டை தாலுகா அலுவலகம் நோக்கி திரண்டு வந்த பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் பள்ளியை மீ்ட்டுதர வலியுறுத்தினர்.
அதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் கல்வி துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி பள்ளி நிர்வாகத்தை புதன்கிழமை ஓப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.