For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈழத் தமிழர்களுக்கு தமிழகத் தமிழர்கள்தான் விடுதலை பெற்றுத் தர வேண்டும்- வைகோ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஈழத் தமிழர்களுக்கு தமிழகத்தில் உள்ள தமிழர்கள்தான் விடுதலை பெற்றுத் தர வேண்டும். அந்தப் பொறுப்பு நம்மிடம் உள்ளது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

சென்னை தி.நகரில் மதிமுக சார்பில் மாவீரர் நாள் பொதுக் கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்தக் கூட்டத்தில், வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் ஆகியோர் கலந்து கொண்டு, ஈழப் போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினார்கள்.

விழா மேடை அருகே தொண்டர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்கள். மேடையில் துப்பாக்கியை நிறுத்தி அதன் மீது ஹெல்மட் மாட்டப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில்,

ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு திருப்பதி கோவிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. நான் கோவில் நிர்வாகத்தை குறை சொல்லவில்லை. அவரை அழைத்து இப்படி செய்ததற்கு மன்மோகன் சிங் அரசைத்தான் நான் குற்றம் சொல்வேன். எத்தனை கோவில்களை இடித்தவன் ராஜபக்சே?

தமிழ் ஈழ மக்கள் உரிமை போராட்டத்தை அழிக்க 5 ஆண்டுகளாக இந்திய அரசு ஆயுதம் வழங்கி வந்துள்ளது. இந்திய அரசின் இந்த துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது.

விடுதலைப்புலிகள் பற்றி இங்கு பேசக் கூடாது என்கிறார்கள். தடை செய்யப்பட்ட நாடுகளில் எல்லாம் பிரபாகரனின் படம் வைக்கப்படுகிறது. விடுதலைப்புலிகள் பற்றி கூட்டம் நடத்த அனுமதி உள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு விடுதலையை பெற்றுத்தரும் பொறுப்பு இங்குள்ள தமிழர்களுக்கும் உண்டு.

இலங்கை போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வீசியதே விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்கு காரணம். இதில் எத்தனை மாவீரர்கள் மறைந்து போய், உன்னத நோக்கத்திற்காக உயிர் கொடுத்தனர். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.

தமிழீழ போராட்டத்தை முன்னெடுத்து செல்ல பிரபாகரன் வருவார். தமிழீழம் நிச்சயம் மலரும். போரை முன்னெடுத்து செல்லும் பிரபாகரனுக்கு தோள் கொடுக்க நாங்கள் தயார் என்றார்.

பழ.நெடுமாறன் பேசுகையில்,

ஈழ போரில் விடுதலை புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. அதை எப்படி முன்னெடுத்து செல்வது என்று பிரபாகரனுக்கு தெரியும். இடையில் சிலர் குழப்புகிறார்கள். ஆனால் உலக தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்.

விடுதலைப்புலிகள் மீண்டும் எழுச்சி பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை. பதுங்கும் காலம் இது. பாய்ந்து தாக்கும் காலம் வரும் என்றார்.

புதிய தமிழகம் சார்பில்...

இதேபோல சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பிலும் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது.

நேற்று காலை சென்னை பாண்டிபஜார் பனகல்பார்க் அருகே ஏராளமான புதிய தமிழகம் கட்சியினர் திரண்டிருந்தனர். புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், ஈழத்திற்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கையில் சுயநிர்ணயம் வேண்டி போராடி உயிர் நீத்த தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். இதுவரை ஈழத்தில் மட்டும் நடைபெற்ற மாவீரர் தினம், தமிழகம் முழுவதும் இப்போது அனுசரிக்கப்படுகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு தனி ஈழம் கிடைத்தே தீரும்.

தனி ஈழம் பெறுவதற்கு இங்குள்ள தலைவர்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை விடுத்து, தமிழர்களுக்காக ஒன்றுபடுவோம் என்று எல்லோரும் சூளுரை ஏற்க வேண்டும் என்றார்.

--

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X