துபாய் நெருக்கடியால் நமக்குப் பாதிப்பில்லை - இந்தியா
துபாய் நிதிச் சந்தை பெரும் கடனில் தவிக்கிறது. இது உலக மார்க்கெட்டையே ஆட வைத்துள்ளது,.
இந்த சரிவு இந்தியாவை பாதிக்குமா? என்று டெல்லியில், அமைச்சர் பிராணாப் முகர்ஜியிடம் கேட்கப்பட்டது.
அவர் கூறுகையில், "இந்திய பொருளாதாரம் மிகப்பெரியது. மீளும் தன்மை கொண்டது. எனவே துபாயில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்திய நிறுவனங்கள் துபாயில் பெரிய அளவு முதலீடு செய்யவில்லை" என்று தெரிவித்தார்.
இதே கருத்தை அமைச்சர் ஆனந்த் சர்மாவும் கூறியுள்ளார்.
ஆனால் உண்மையில், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள், வங்கிகள், துபாயில் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்கு சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் கொடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
இதனிடையே, பாதிப்பின் நிலவரம் குறித்து அறிந்து கொள்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ், துபாய் நிறுவனங்களுக்கு இந்திய வங்கிகள் கொடுத்துள்ள கடன் குறித்து உடனடியாக அறிக்கை அளிக்கும்படி கேட்டுள்ளார்.