தமிழகத்தில் சமச்சீர் கல்வித்திட்டம் அடுத்தாண்டு அமல்
சென்னை: தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான பொதுப் பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டு முதல்வர் கருணாநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து குழந்தைகளுக்கும் பாரபட்சமின்றி ஒரே விதமான தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வித்திட்டத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
இத்திட்டத்தின்படி தமிழகத்தில் தற்போது உள்ள மாநிலக்கல்வி (ஸ்டேட் போர்டு), மெட்ரிகுஷேசன் (மெட்ரிகுலேசன்), ஆங்கிலோ இந்தியன் (ஆங்கிலோ இந்தியன் போர்டு), ஓரியண்டல் (ஓரியண்டல் போர்டு) ஆகிய 4 கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து இந்த 4 வாரியங்களிலும் உள்ள சிறப்பு அம்சங்களை தொகுத்து ஒரு பொதுவாரியம் அமைக்கப்படுகிறது.
இந்த 4 வாரியங்களின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் பொதுவான ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படுகிறது.
வருகிற கல்வியாண்டு முதல், 1ம் வகுப்பில் இருந்து 6ம் வகுப்புகளுக்கும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் ஏனைய வகுப்புகளுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
சமச்சீர் கல்விக்கான இறுதி செய்யப்பட்ட பொதுப் பாடத்திட்டத்தின் கீழ் விரைவில் பாடப்புத்தகங்கள் அச்சிடப்படும்.
புதிய பாடத்திட்டத்தில் 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணினி கல்வி அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும், சமூக அறிவியல் பாடத்தில் பொருளாதாரப் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 10ம் வகுப்பிற்கு அறிவியல் பாடத்தில் செய்முறைப் பயிற்சி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இறுதி செய்யப்பட்ட பொதுப் பாடத்திட்டம் தமிழக முதல்வரிடம் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. பாடப் புத்தகங்களை குறித்த நேரத்தில் தரமாகவும், பொலிவாகவும் மாணவர்களை ஈர்க்கும்படி தயாரித்து தருமாறு தமிழக முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்.