ரகசிய குறியீட்டு எண் இல்லாத சென்போன்கள் இன்று முதல் கட்!
டெல்லி: சர்வதேச செல்போன் அடையாள எண் (ஐஎம்இஐ) இல்லாத செல்போன்கள் திங்கள்கிழமை முதல் செயலிழக்கின்றன. கிட்டத்தட்ட 2.5 கோடி செல்போன்கள் இயக்கம் இதன்மூலம் நிறுத்தப்படுகிறது.
ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்களுக்கு நவம்பர் 29-ம் தேதியுடன் சேவை அளிப்பதை தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் நிறுத்திக்கொள்ள மத்திய அரசு கெடுவி தித்திருந்தது. அந்த கெடு முடிவடைந்த நிலையில் ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்களுக்கான சேவை நிறுத்தப்படவுள்ளது.
சந்தைக்கு விற்பனைக்கு வரும் ஒவ்வொரு செல்போனுக்கும் தனித்தனி சர்வதேச செல்போன் அடையாள எண் அளிக்கப்படுகிறது. இந்த எண், அந்த செல்போன் எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது, அந்த செல்போனின் மாடல் ஆகியவற்றை குறிக்கும். ஐஎம்இஐ எண் குறித்த தகவல்கள் அனைத்தும் அந்த செல்போனுக்கு சேவை அளிக்கும் நிறுவனத்தில் தானாகவே பதிவாகிவிடும். இந்த எண் இருந்தால், அந்த மொபைலை எளிதில் கண்டுபிடிக்கலாம்.
ஆனால் கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்டு இந்திய சந்தைக்கு வரும் பெரும்பாலான செல்போன்களில் இந்த ஐஎம்இஐ எண் இருப்பதில்லை.
இத்தகை செல்போன்களைத்தான் பெரும்பாலும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் கையாளுகின்றனர்.
இந்தியாவில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இனிமேலும் ஐஎம்இஐ எண்கள் இல்லாத செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதை அனுமதிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு நல்லதல்ல என மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாலேயே இந்த அதிரடி நடவடிக்கை.












Click it and Unblock the Notifications