சென்னை ரயில்வே அலுவலகத்தை சூறையாடிய ஊழியர்கள்!
சென்னை: சென்னை அயனாவரம் ரயில் பெட்டி பழுது பார்க்கும் பணிமனை ஊழியர்கள் இன்று திடீர் வன்முறைப் போராட்டத்தில் குதித்தனர். ரயில்வே அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
சென்னை அயனாவரம் ரயில் பெட்டி பழுது பார்க்கும் பணிமனையில் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஊழியர்களுக்கு பதவி மற்றும் பணி செய்யும் நேரத்திற்கு ஏற்ப ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந் நிலையில் பணிமனையின் மேலாளர் சியாந்தா ராம் எடுத்த சி்க்கன நடவடிக்கை காரணமாக இந்த ஊக்கத் தொகை குறைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.
கடந்த 2ம் தேதி இந்த ஊழியர்கள் அனைவரும் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். இதையடு்த்து அவர்களுக்கு அதிகாரிகள், ஆப்சென்ட் போட்டனர்.
இதனால் அதிகாரிகள் மீது ஊழியர்கள் கடும் எரிச்சலில் இருந்தனர்.
இந் நிலையில் இன்று காலை சுமார் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்குச் செல்லாமல் மேலாளர் அலுவலகத்துக்கு வெளியே கூடி நின்று கோஷமிட்டனர்.
திடீரென உள்ளே நுழைந்த அவர்கள் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். ஜன்னல்கள், மேஜை, நாற்காலிகள் சேதம் உடைத்து நொறுக்கப்பட்டன.
அலுவலகத்தில் இருந்த பொருட்களை வெளியே வீசினர். மேலும் மேலாளரின் காரும் அடித்து நொறுக்கப்பட்டது.
சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வந்தனர். ஆனால், அவர்கள் மிகக் குறைந்த அளவே இருந்ததால் அவர்களால் வன்முறையில் ஈடுபட்ட ஊழியர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. இதைத் தொடர்ந்து மேலும் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்தது தென்னக ரயிலேவே தொழிற் சங்க (எஸ்.ஆர்.எம்.யூ.) பொதுச் செயலாளர் கண்ணையா, தெற்கு ரயில்வே எஸ்.சி.எஸ்.டி. தொழிற் சங்க பொதுச் செயலாளர் ஞானசேகரன், டி.ஆர்.இ.யு. சங்க பொதுச் செயலாளர் ஜானகிராமன் ஆகியோர் விரைந்து வந்து ஊழியர்களை அமைதிப்படுத்தினர்.
பின்னர் மேலாளர் சியாந்தா ராம் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியதில் சமரசம் ஏற்பட்டது.
ஊக்கத்தொகை குறைப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். மேலும் கடந்த 2ம் தேதி ஊழியர்களுக்கு போடப்பட்ட ஆப்சென்ட்டை விடுமுறையாக அங்கீகரிக்கவும் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து ஊழியர்களின் திடீர் வன்முறை முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications