வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு: சமூகநீதி பேரவை சார்பில் போராட்டம்-ராமதாஸ்
சேலம்: தமிழகத்தில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கு எடுக்க கோரி வக்கீல்கள் சமூகநீதி பேரவை சார்பில் டிசம்பர் 22 -ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
வக்கீல்கள் சமூகநீதி பேரவையின் சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட கருத்தரங்க மாநாடு சேலத்தில் நடைபெற்றது.
இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,
தகுதியான வக்கீல்கள் நமது (வன்னியர்) சமுதாயத்தில் இருக்கிறார்கள். தகுதியான நமது சமுதாய மக்களை கைதூக்கிவிட்டு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவியில் அமர்த்த நம்மிடம் அரசியல் அதிகாரம் இல்லை. எனவே போராடவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
சென்னை ஐகோர்ட்டில் உள்ள 126 மூத்த வக்கீல்களில் ஒருவர் கூட வன்னியர் கிடையாது. ஆனால் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 36 பேர் மூத்த வக்கீல்களாக உள்ளனர்.
இது போல படிப்பு, வேலை, தொழில் போன்றவற்றிலும் வன்னியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே, சாதிவாரியாக கணக்கெடுத்தால் மட்டுமே இட ஒதுக்கீட்டு சலுகை நாம் பெற முடியும்.
எனவே, டிசம்பர் 22 ம் தேதி சாதிவாரியாக கணக்கு எடுப்பை வலியுறுத்தி, வக்கீல் சமூகநீதி பேரவை சார்பில் கறுப்பு கோர்ட்டு அணிந்து தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படும்.
அருந்ததியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கிய அரசு, பெரும்பான்மை சமுதாயமாக விளங்கும் வன்னியர்களுக்கும் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு ஏன் வழங்ககூடாது?
வருகிற 2010 -ம் ஆண்டில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனிஒதுக்கீடு கேட்டு நடத்தும் மிகப்பெரிய போராட்டத்தை தமிழ்நாடு சந்திக்க போகிறது.
5 ஆயிரம் வக்கீல்கள் கறுப்பு கோர்ட்டுடன் பங்கேற்கும் ஊர்வலம் மற்றும் மாநாடு சென்னையில் நடத்தப்படும். எந்த தேதியில் போராட்டம் என்பதை பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications