தீவிரவாதி கசாப்பின் வக்கீல் நீக்கம்-கோர்ட் உத்தரவு
சரிவர ஒத்துழைப்பு தரவில்லை என்பதற்காக அவரை நீக்கியுள்ளதாக தனி கோர்ட் நீதிபதி தஹிளியானி தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் நலனை மனதில் கொள்ளாமல், செயல்படுகிறார் கஸ்மி. எனவே அவர் நீக்க்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
கஸ்மி நீக்கப்பட முக்கியக் காரணம் - மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் மொத்தம் உள்ள 340 சாட்சிகளில், முதலில் 71 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்துமாறு கோர்ட் கஸ்மிக்கு யோசனை தெரிவித்தது.
ஆனால் அதை நிராகரித்த கஸ்மி, அனைத்து சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாக கூறினார்.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி தஹிளியானி, இந்த வழக்கிலிருந்து கஸ்மி நீக்கப்படுகிறார். அவரது உதவியாளர் கே.பி.பவார் இனி இந்த வழக்கை கசாப்புக்காக கையாளுவார் என்ற அறிவித்தார். பவாரும், தனி கோர்ட்டால் நியமிக்கப்பட்டவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நவம்பர் 26ம் தேதி அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த சாட்சிகளின் பிரமாணப் பத்திரங்கள் குறித்து எனக்குக் கவலை இல்லை என்று நீதிபதியின் கண்டனத்திற்குள்ளானார் கஸ்மி. உங்களை ஏன் வழக்கறிஞர் பணியிலிருந்து நீக்கக் கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து கஸ்மி மன்னிப்பு கேட்கவே அவருக்கு பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸை ரத்து செய்தார் நீதிபதி.
தற்போது நீதிபதியின் யோசனையைக் கேட்க மறுத்ததால் கசாப்புக்கான வக்கீல் பொறுப்பிலிருந்து கஸ்மி நீக்கப்பட்டுள்ளார்.