இலங்கை அதிபர் தேர்தலில் சம்பந்தன் போட்டி?
தற்போதைய அதிபர் ராஜபக்சே, அதிபராகத் துடிக்கும் பொன்சேகா ஆகிய இருவருக்கும் வாக்களிக்க தமிழர்கள் மத்தியில் சுத்தமாக ஆர்வம் இல்லை. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை அதிபர் தேர்தலில் தனது நிலையை அறிவிக்காமல் உள்ளது.
இருவரையும் ஆதரிக்கும் மன நிலைக்கும் அது இதுவரை வரவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனியாக அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.
மேலும் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனே வேட்பாளராகத் தகுதியானவர் என்றும் கட்சியினர் பரிந்துரைத்துள்ளனராம்.
இருப்பினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்களுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு தமிழ் வேட்பாளர் ஒருவரை தேர்தலில் களமிறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.