பெண்ணாகரம் திமுக எம்எல்ஏ பெரியண்ணன் மரணம்

தர்மபுரி வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்த அவர் சில காலமாக புற்று நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார்.
பெண்ணாகரம் தாலுகா அருகே உள்ள சாலைகுள்ளாத்திரம்பட்டி தான் அவரது சொந்த ஊராகும். இறுதிச் சடங்குகள் சொந்த ஊரில் நாளை நடத்தப்படும் என்று தெரிகிறது.
தர்மபுரி மாவட்ட பாமக பிரமுகர்களில் முக்கியமானவராக திகழ்ந்த பெரியண்ணன் அக்கட்சியின் மாவட்ட செயலாளராகவும் இருந்தார். பின்னர் பாமகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்.
2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பின் பெரியண்ணன் பதவியில் இருக்கும்போதே இறந்த 6வது எம்எல்ஏ ஆவார்.
இதற்கு முன் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் (திமுக, மதுரை மத்திய தொகுதி), எஸ்.வி.சண்முகம் (அதிமுக, மதுரை மேற்கு தொகுதி), வீர.இளவரசன் (மதிமுக, மதுரை திருமங்கலம்), ஊர்வசி செல்வராஜ் (காங்கிரஸ், ஸ்ரீவைகுண்டம்), எஸ்.பி.ஜெயராமன் (திமுக, வந்தவாசி) ஆகியோர் மரணமடைந்துள்ளனர்.
பெரியண்ணனின் மறைவால் சட்டசபையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 96 ஆகக் குறைந்துள்ளது.
மறைந்த பெரியண்ணனின் உடலுக்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள், கனிமொழி எம்பி உள்ளிட்ட திமுக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பெரியண்ணன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
கரூர் மாவட்ட கழகத்தின் செயலாளராக அரும் பணியாற்றிய சகோதரி வாசுகி முருகேசன் மறைந்த துக்கம் மறைவதற்குள் இதோ மற்றொரு அதிர்ச்சி செய்தியாக தர்மபுரி (வடக்கு) மாவட்ட கழகத்தின் செயலாளரும், பெண்ணாகரம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான தம்பி பி.என். பெரியண்ணன் மறைந்து விட்டார் என்ற செய்தி வந்துள்ளது.
ஒரு சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் எவ்வளவோ சிகிச்சைகள் அளித்தும் தேறாமல் நம்மைவிட்டு பிரிந்து விட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
அடக்கமும், அமைதியும் வாய்ந்தவர். எதற்கும் எதிர்த்து பேசமாட்டார். கழகத் தோழர்களிடம் அன்பாக பழகி அனைவரையும் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.
அவரது மறைவால் வருந்தும் அவருடைய குடும்பத்துக்கும், கழகத் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
பெரியண்ணன் காலமானதையொட்டி திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. திமுக கொடிகள் 3 நாட்கள் அரைக் கம்பத்தில் பறக்கும் என்று நிதியமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications