மதுராந்தரகம் அருகே வி.சி. பிரமுகர் கொலை
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவியின் மகனை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேட்டை சேர்ந்த கஜேந்திரனின் மனைவி தமிழரசி. விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தமிழரசி சூனாம்பேடு ஊராட்சி மன்றத் தலைவியாக உள்ளார்.
இவரது மகன்கள் ஆனந்தன் (34), அருள் (30). இருவரும் பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
இவர்களது உறவினரான செந்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தார். சமீபத்தில் அவர் நீக்கப்பட்டு அந்தப் பதவியில் ஆனந்தன் நியமிக்கப்பட்டார்.
இதனால் செந்தில், ஆனந்தன் குடும்பத்தினர் இடையே பகை மூண்டது. இந் நிலையில் ஆனந்தன், அருள் மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து செந்திலை கொலை செய்தார்.
இதனால் செந்திலின் ஆதரவாளர்கள் சில மாதங்களுக்கு முன் ஆனந்தனையும் அவரது தந்தை கஜேந்திரனையும் வெட்டினர். இதில் கஜேந்திரன் இறந்தார். ஆனந்தன் தப்பிவிட்டார்.
இதையடுத்து ஆனந்தனை போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஆனந்தனின் தம்பி அருள் அந்த பகுதியை சேர்ந்த மைதிலி என்ற பெண்ணை காதலித்து வந்தார். நேற்றிரவு மைதிலின் வீட்டில் அருள் இருந்தபோது செந்திலின் ஆதரவாளர்கள் வீட்டுக்குள் புகுந்து அருளை சரமாரியாக வெட்டினர்.
மயங்கி விழுந்த அருளின் தலையில் பாறாங்கல்லையும் போட்டனர். இதில் தலை சிதறி அதே இடத்தில் அருள் பிணமானார்.
சம்பவத்தில் மைதிலிக்கும் வெட்டு விழுந்தது. அவர் தப்பியோடியதால் பிழைத்துக் கொண்டார்.
கொலைக் கும்பலைப் பிடித்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications