தனி தெலுங்கானா கோரி போலீஸ்காரர் தற்கொலை
நகரி: தனி தெலுங்கானா கோரிக்கையை முன்வைத்து ஆந்திராவில் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திராவில் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணய்யா. போலீஸ்காரரான இவர், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தனி தெலுங்கானா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் நடத்த இருந்த, 'சாகும்வரை உண்ணாவிரத போராட்ட'த்தின் மூலம் இந்த முறை எப்படியும் தனி தெலுங்கானா கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தார்.
ஆனால் சந்திரசேகர ராவின் போராட்டம் தடைபட்டதால், இனி தனி தெலுங்கானா கிடைக்காதோ என்று அவர் மனம் உடைந்தார். இந்நிலையில் இன்று காலை திடீரென அவர், தனது சொந்த ஊரான காமா ரெட்டியில் உள்ள செல்போன் டவரின் உச்சியில் ஏறினார்.
அங்கு 2 நிமிடம் நின்றபடியே, 'ஜெய் தெலுங்கானா' என்று கோஷமிட்டார். பின்னர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.