விலைவாசி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி- கோபப்பட்ட பிரணாப்
டெல்லி: விலைவாசி உயர்வு குறித்து கேட்ட கேள்விகளுக்கு முறையாகப் பதிலளிக்காமல் கோபப்பப்பட்டு பேசியதால் பிரணாப் முகர்ஜியை கண்டித்து எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டன.
நேற்று ராஜ்யசபாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து கேட்கப்பட்டது. காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சுக்லா எழுந்து, சமையல் எண்ணை உள்ளிட்டவற்றின் விலை உயர்வைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரணாப், உற்பத்திக்கும், பொருட்களின் தேவைக்கும் இடையே சம நிலை இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.
குறிப்பாக பருப்பு வகைகள், சமையல் எண்ணை, சர்க்கரை போன்றவை தேவையான அளவுக்கு உற்பத்தி இல்லை, வரத்து இல்லை. இதனால் கிராக்கி அதிகமாகி விலை உயர்வுக்கு வித்திட்டுள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட சிபிஎம் உறுப்பினர் பிருந்தா காரத், சர்க்கரை விலை கிலோ ரூ. 40க்கு விற்கிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்துள்ளது என்றார்.
அதற்கு அவர் பதிலளித்தபோது மற்ற இடதுசாரி உறுப்பினர்களும் எழுந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக குற்றம் சாட்டினர்.
இதனால் கோபமடைந்தார் பிரணாப். ஆவேசமாக பேசிய அவர், உங்க கோபத்தை இங்கே காட்டாதீங்க. வேறு எங்கேயாவது போய் காட்டுங்க என்றார் வேகமாக.
பின்னர் பதிலளிக்காமல் உட்கார்ந்து விட்டார். இதனால் ஆவேசமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்து பிரணாபை குற்றம் சாட்டிப் பேசியதால் அவையில் அமளி ஏற்பட்டது.
பின்னர் மீண்டும் எழுந்து பிரணாப், இந்த ஆண்டு சர்க்கரையின் கையிருப்பு 16 மில்லியன் டன்களாக இருக்கும். ஆனால் தேவை 23 மில்லியன் டன்களாக உள்ளது. எனவே பற்றாக்குறை காரணமாக விலைவாசி உயர்ந்துள்ளது.
இதனால் சாதாரண வகுப்பு மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பொது விநியோகத் திட்டத்தின் மூலம் இவை முறையாக உரியவர்களுக்கு சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாநில அரசுகளும் உதவ வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications