நீலகிரி சேதம்- மத்திய அரசிடம் நிதியுதவி கோரும் ராசா
டெல்லி: மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் சாலை சீரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி மத்திய அரசுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு ராசா எழுதியுள்ள கடிதத்தில்,
அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் பெருமளவில் சேதடைந்துள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் 150 இடங்களில் நிலச்சரிவும், 40 இடங்களில் மண் அரிப்பும் ஏற்பட்டு சாலையின் சுற்றுச்சுவர்கள் சேதமடைந்துள்ளன.
பர்லியார் மரப் பாலம் உள்ளிட்டவை வெள்ளத்தில் முழுவதுமாக அடித்து செல்லப்பட்டு, ஆழமான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் சீரமைப்பு பணிகள் முழு முனைப்புடன் நடைபெற்று வருகிறது.
அதேபோல் கோவை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 47 மற்றும் 67 பெருமளவில் சேதமடைந்துள்ளது. சாலைகளில் அதிகளவு பள்ளங்கள், ஏற்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளது.
செங்கபள்ளி எல் அண்டு டி பைபாஸ் சாலை, மதுரைக்கரை வாளையார் சாலை, மேட்டுப்பாளை யம் ஊட்டி சாலை, கூடலூர் சாலை ஆகியவற்றில் நிரந்தர சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
மேலும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகளையும் போர்க்கால அடிப்படையில் சரி செய்ய தேவையான நிதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராசா.