தந்தைக்கு பயந்து தூக்கில் தொங்கிய மாணவன்
சென்னை: வகுப்பில் சண்டை போட்டதைத் தொடர்ந்து ஆசிரியை திட்டி, தந்தையை வரச் சொன்னதால் பயந்து போன மாணவன் தூக்கில் தொங்கி விட்டான். உடனடியாக அவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் சிவபார்வதி நகர் பாடசாலை தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவர் அம்பத்தூர் நகராட்சியில் ஊழியராக உள்ளார். இவரது மகன் சாந்தகுமார் (12). இவன் ராஜமங்களம் அருகிலுள்ள மாநகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மதியம் வகுப்பறையில் மாணவன் சாந்தகுமாரும், வினோ என்ற மாணவனும் அடித்துக் கொண்டனர். இதனை மற்ற மாணவர்கள் விலக்கி விட்டனர். இதுகுறித்து வகுப்பு ஆசிரியை சகுந்தலாவிடம் மாணவர்கள் புகார் கூறினார்கள்.
இதையடுத்து ஆசிரியை சகுந்தலா இரண்டு மாணவர்களையும் அழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் இருவரிடமும் உங்கள் பெற்றோரை அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்.
வீட்டிற்கு சென்ற மாணவன் சாந்தகுமார் தனது தாய் கோவிந்தம்மாளிடம் வகுப்பில் நடந்த சண்டையால் ஆசிரியை சகுந்தலா பெற்றோரை அழைத்து வரச்சொல்லி அனுப்பியதாக கூறினான். இதைக் கேட்ட அவர், அப்பாவுக்கு போன் செய்து சொல்லி விட்டு வருகிறேன் என்று கூறி போன் செய்ய சென்றார்.
அப்பா வந்தால் அடிப்பாரோ, திட்டுவாரோ என்று பயந்த மாணவன் சாந்தகுமார், வீட்டிலிருந்த நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றான்.
திரும்பி வந்த கோவிந்தம்மாள் வீட்டுக்கு திரும்பியபோது மகன் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடுவதை பார்த்து அலறியபடி கயிற்றை அவிழ்த்து ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக அண்ணாநகரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.