பாபர் மசூதி இடிப்பு தினம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதி நெருங்கும் நிலையில் ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ம் தேதியில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஹைதராபாத்துக்கு எச்சரிக்கை:
பாபர் மசூதி இடிப்பு நாளன்று ஹைதராபாத்தில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகளை நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
இதனால் நகர் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சோதனைகளும் நடந்து வருகின்றன.
நகரில் சந்தேகப்படும் படியான பொருளோ, செல்போனோ கீழே கிடந்தால் அதை எடுக்க வேண்டாம் என்று போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
அதே போல நாடு முழுவதும் ரயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயிலில் அனுப்பப்படும் பார்சல்கள் அனைத்தும் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
ஓடும் ரயில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்திலும் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலையத்தில் தீவிர கண்காணி்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்பேடு பஸ் நிலையம், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரயிலில் பார்சல் அனுப்ப தடை:
இந் நிலையில் பாதுகாப்பு கருதி வரும் 4, 5, 6ஆகிய மூன்று நாட்கள் ரயில்களில் பார்சல் அனுப்புவது ரத்து செய்யப்படுகிறது.
காய்கறி, பழங்கள், மீன் போன்ற அழுகும் பொருட்கள், பத்திரிகை போன்றவை மட்டும் ரெயில்களில் அனுப்பப்படும். வர்த்தக வியாபார ரீதியான எந்த பொருட்களும் அனுப்ப முடியாது.