சென்னை: நிறுத்துமிட வசதி இருப்பதை நிரூபித்தால்தான் 2வது கார் வாங்க அனுமதி!

சென்னை மாநகரம் நாளுக்கு நாள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. நகரின் மக்கள் தொகை அதிகரிக்கும் அளவுக்கு நகரின் எல்லைப் பகுதி விரிவடையாமல் உள்ளது. இதனால் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிய கதையாக மாறி வருகிறது.
சென்னை மாநகருக்குள் இட நெருக்கடி அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை என்று மட்டுமல்லாமல், வாகனப் பெருக்கமும் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்து விட்டது.
இதன் காரணமாக கார்கள் வாங்குவதில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வர போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி ஏற்கனவே ஒரு கார் வைத்திருப்போர், 2வதாக கார் வாங்க முடிவு செய்தால், அந்தக் காரை நிறுத்த போதிய இட வசதி உள்ளது என்பதை போக்குவரத்துத் துறைக்கு நிரூபிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் 2வது காருக்கான அனுமதி கிடைக்கும்.
தற்போது சென்னை நகரவாசிகள் பலரும் தங்களது கார்களை வீட்டு வளாகத்திற்குள் நிறுத்த வசதியில்லாமல் தெருக்களில் நிறுத்தி வைத்திருப்பதை சர்வ சாதாரணமாக பார்க்கலாம். இதனால் பல்வேறு இடையூறுகள், தகராறுகள் ஏற்படுகின்றன.
இதைத் தவிர்க்கவும், தெருக்கள், சாலைகளில் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் இந்த புதிய திட்டத்தை போக்குவரத்துத் துறை தீட்டியுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை ஆணையர் மச்சேந்திரநாதன் கூறுகையில், சாலைகளிலும், தெருக்களிலும் கார்களை நிறுத்தி வைப்பதை மக்கள் கைவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். அதற்காகவே இந்த நடவடிக்கை.
தற்போது வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் பலரும் சாலையோரங்களிலும், தெருவோரங்களிலும் கார்களை நிறுத்தி வைக்கின்றனர். கார்கள் என்றில்லாமல் பஸ்கள், வேன்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களும் இதுபோல நிறுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
இதைத் தவிர்க்கவே போதிய இட வசதி இருந்தால் மட்டும் கூடுதலாக வாகனங்களை வாங்குமாறு கூறப் போகிறோம். இது கார் வாங்குவதைத் தடுப்பதற்காக கொண்டு வரப்படும் விதி அல்ல, மாறாக முறையான பார்க்கிங் வசதியுடன் வாகனங்களை வைத்துக் கொள்ளுங்கள் என்று மக்களை ஊக்கப்படுத்தும் நடைமுறையே இது.
இந்த புதிய விதிமுறை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் விரைவில் அமல் செய்யப்படும் என்றார்.
தற்போது சென்னை நகரில் ஒரு நாளைக்கு 800 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றனவாம். அதேசமயம் சாலைகளின் அகலம் மட்டும் பெரிய அளவில் இன்னும் மேம்படாமல் உள்ளது. சாலைகளை நன்கு அகலப்படுத்தினால் வாகன நெரிசல்கள் பெருமளவில் குறைய வாய்ப்புளளது.












Click it and Unblock the Notifications