ராமர் கோவில்-இ.முன்னணி காவி கொடி போராட்டம்
சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்கிடக் கோரி தமிழகம் முழுவதும் காவிக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் போராட்டம் ஆகியவை நடத்தப்படும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் மாநில அமைப்பாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரச்சனை 60 வருடங்களாக தீராமல் உள்ளது. டிசம்பர் 6 ம் தேதியையொட்டி தமிழகத்தில் முஸ்லீம் அமைப்புகள் மத டென்ஷனை உருவாக்குகிறது.
பொது மக்கள் பயணம் செய்ய முடியாத நிலையை உருவாக்குகின்றனர். காவல் துறையினர் 15 நாட்களுக்கு நிம்மதியில்லாமல் செய்து விடுகிறது. அயோத்தி நகரம் உள்ள உத்திர பிரதேச மாநிலத்தில் முஸ்லீம்கள் அமைதியை நிலை நாட்டும் போது தமிழக முஸ்லீம் அமைப்புகள் மட்டும் நிம்மதியில்லாமல் செய்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டாமல் இருப்பது தான் காரணம்.
ராமஜென்ம பூமி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு 1948ல் இருந்து நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு உடனே முடிக்கப்பட்டிருந்தால் நேரு காலத்திலேயே இந்தப் பிரச்சனை முடிந்திருக்கும்.
ராமஜென்ம பூமி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கின் முடிவை, மத்திய அரசு உடனே வெளியிட வேண்டும். 100 கோடி இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி இந்து முன்னணி இயக்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் காவிக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை, ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், கரூர் ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் மற்ற இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இந்து முன்ணனியின் நிறுவனர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,
டிசம்பர் 6ம் தேதி அன்று 6 முஸ்லீம் அமைப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளதாக காவல் துறை அதிகாரி பத்திரிக்கையாளர்கள் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 6ம் தேதி அன்று ஸ்ரீ ராமர் ஆலயம் அயோத்தியில் அமைத்திட வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்திட அனுமதி கோரி காவல் துறை அதிகாரியிடம் மனு கொடுக்கப் பட்டுள்ளது. இதுவரை எந்தவித பதிலும் தரப்படவில்லை.
காவல் துறையினர் இத்தகைய பாரபட்சமான போக்கை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
பாரபட்சம் இல்லாமல், ஜனநாயக ரீதியில் செயல்பட காவல் துறை அதிகாரிகளை இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications