ஹைகோர்ட் மோதல்-போலீசார் மீது நடவடிக்கை எடுக்க தடை
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற வளாக மோதல் சம்பவம் தொடர்பாக, நான்கு போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது. ஹைகோர்ட் நீதிபதி உட்பட ஏராளமானோர் படுகாயமடைந்த இச்சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வக்கீ்ல்கள் தொடுத்த வழக்கில், அப்போதைய போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது. சம்பவ இடத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகள், நிலைமைக்கு ஏற்ப எடுத்த முடிவில் சதி இருப்பதாக கூற முடியாது. இதுகுறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற பிறப்பி்த்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சிங்வி, ஏ.கே.கங்குலி அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்', போலீஸ் அதிகாரிகள் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர்.