இலங்கை அகதிகள் முகாமில் இலவச டிவி விநியோகம்
நெல்லை: இலங்கை அகதிகள் முகாமில் தமிழக அரசின் இலவச டிவிக்களை மாநில அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை வழங்கினர்.
தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும தமிழக மக்களுக்கு அமல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத் திட்டங்கள் அகதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் அரசு அறிவித்தது.
அதன்படி, நெல்லை பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் இலவச கலர் டிவி வழங்கப்பட்டது.
பெருமாள்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயராமன் தலைமையில் 48 குடும்பங்களுக்கு இலவச கலர் டிவியை அமைச்சர் மைதீன்கான், பூங்கோதை வழங்கினர்.
அப்போது அமைச்சர் மைதீன்கான் கூறுகையில், 'நெல்லை மாவட்டத்தில் 10 அகதிகள் முகாம்களில் 888 இலங்கை தமிழர் குடும்பங்கள் உள்ளன. தற்போது இவர்கள் பயன்பெரும் வகையில் அரசு சார்பில் இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்து வசதிகளும் விரைவில் செய்து கொடுக்கப்படும்' என்றார்.
கங்கைகொண்டான் இலங்கை அகதிகள் முகாமில் கலெக்டர் தலைமையில் அமைச்சர் பூங்கோதை இலவச கலர் டிவிக்களை வழங்கினார்.