கடையநல்லூரில் மர்மக் காய்ச்சலுக்கு அடுத்தடுத்து 2 சிறார்கள் பலி
கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் மர்மக் காய்ச்சலுக்கு அடுத்தடுத்து இரு சிறுவர்கள் இறந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம், பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் அஜய் (6). இந்த சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை காய்ச்சல் வந்து உயிரிழந்தான்.
இது சாதாரணக் காய்ச்சலாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் கருதினர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை, அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் இரண்டரை வயது மகன் குணாவும் திடீரென இறந்ததால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டது.
குணாவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தானாம். இது பன்றிக் காய்ச்சலாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
இதுகுறித்து கடையநல்லூர் நகராட்சி சுகாதாரத் துறை அக்கறை காட்டாமல் இருப்பதாகவும், கடைநயல்லூரில் சுகாதாரக் கேடு மலிந்திருப்பதாகவும் மக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
இந்த இரு சிறுவர்களின் மரணத்திற்கான காரணம் குறித்து நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.