தர்மபுரி: புலித்தோல் கடத்தியவர்கள் கைது
தர்மபுரி: புலித்தோல், யானை தந்தம் ஆகியவற்றை கடத்தியவர்களை தர்மபுரி அருகே மாறு வேடத்தில் சென்ற வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
தர்மபுரியை அடுத்த பாப்பாரப்பட்டி சவுலுப்பட்டி பிரிவு சாலையில் சிறுத்தை புலி தோலை மர்ம நபர்கள் கடத்தி வருவதாக, வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, மாவட்ட வன பாதுகாவலர் வரதராஜுலு உத்தரவின் பேரில், மாவட்ட வன அதிகாரிகள் மாறுவேடத்தில் சவுலுப்பட்டி பிரிவு சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பைக்கில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரித்த போது, அவர்களிடம் சிறுத்தைப் புலித் தோல் இருப்பது தெரிய வந்தது. உடனே, வனத்துறையினர் அவர்களிடம் இருந்து சிறுத்தை புலி தோலை பறிமுதல் செய்து மூவரையும் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் , பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த ஜெயவேல்(35), முருகன்(40), பெரியனூரைச் சேர்ந்த ராஜு(37) என தெரிய வந்தது. மூவரையும் வனத்துறையினர், தர்மபுரி நீதிமன்றம் மூலம் போலீசில் ஒப்படைத்தனர்.
இதேபோல், பாலக்கோடு எம்.ஜி.சாலை வழியாக ஒரு கும்பல், யானை தந்தத்தை கடத்தி வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த கும்பலை மாறுவேடத்தில் சென்று பிடித்தனர். அவர்களிடம் இருந்த யானை தந்தத்தை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர்கள், பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த பொன்முடி(45), சங்கர்(28), பாலக்கோடைச் சேர்ந்த மணி(31), சிரியப்பட்டியைச் சேர்ந்த மாதேஷ்(32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களும் கைது செய்யப்பட்டனர்.